தேர்தலில் விஜய்-சீமானுக்கு தான் போட்டி...எங்களுக்கு கவலையில்லை: அமைச்சர் ஐ.பெரியசாமி
திண்டுக்கல்: தேர்தலில் 3வது இடத்திற்கு சீமானும் விஜய்யும் முயற்சி செய்கிறார்கள். இவர்களால் ஒரு இடத்தைக் கூட தமிழ்நாட்டில் பிடிக்க முடியாது. விஜய் பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், அரசியலில் விஜய்க்கு அடிச்சுவடி என்ன என்பதே தெரியாது. மக்கள் பொழுதுபோக்கிற்காகவே விஜயை பார்க்கிறார்கள். ஆட்சி மாற்றம் வேண்டும் என்று சொன்ன சீமான் 8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை சீமானும், விஜய்யும் 3வது இடத்திற்கு முயற்சிக்கிறார்கள். இவர்களால் ஒரு இடம் கூட வெல்ல முடியாது. இந்தியாவின் தலைசிறந்த தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இயங்கி வருகிறார். மக்களுக்காக எல்லாத் திட்டங்களையும் வழங்கி, மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார். அவர் மீண்டும் 2026ல் ஆட்சிப்பீடம் ஏற இருக்கிறார்.
விஜய் அவரைத் தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாகச் சொல்கிறீர்கள். முதல்வர் ஸ்டாலினை எந்த விமர்சனமும் தொட்டுப் பார்க்க முடியாது. காரணம் கடந்த நான்கு ஆண்டு காலத்தில் எல்லாச் சார்பு மக்களுக்கும் எண்ணற்ற திட்டங்களைத் தந்து, தொழில்துறையில் மட்டுமல்லாது, எல்லாத் துறையிலும் இன்றைக்குத் தமிழகம் முதல் மாநிலமாக விளங்குகிறது. விஜய் இன்றைக்குத்தான் வந்திருக்கிறார்.
விஜய்க்கு 9 தொகுதிகளில் மட்டுமே கூட்டம் வந்திருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும்போது அதைவிட அதிக கூட்டம் வரும். யாரோ சொல்லி விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். விஜயை பார்க்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது. திமுகவிற்கு யாரும் போட்டியில்லை. முதல்வருக்குப் போட்டி யாரும் இல்லை. இவ்வாறு தெரிவித்தார். திமுக பல லட்சம் வாக்கு வித்தியாசத்தில் எல்லாத் தொகுதிகளிலும் வெற்றி பெறும். விஜய் பற்றி எங்களுக்கு கவலையே இல்லை. அவரைப் பற்றி நாங்கள் சிந்திக்கவே இல்லை. தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்று விஜய்யைச் சொல்லச் சொல்லுங்க.யாரை வேண்டுமானாலும் குறை சொல்லலாம். குறை சொல்வது என்பது எளிது. செயலாற்றுவது என்பது தான் சிரமம்.
அதிமுகவைப் பொறுத்தவரை எடப்பாடி அவர்கள் இரண்டாவது இடத்திற்கு வர வேண்டும் என்று முயற்சி செய்கிறார் என்றால், 3வது இடத்திற்கு சீமானும் விஜய்யும் முயற்சி செய்கிறார்கள். இவர்களால் ஒரு இடத்தைக் கூட தமிழ்நாட்டில் பிடிக்க முடியாது. இவர்கள் விமர்சனம் செய்ய செய்ய தளபதியாருக்கு 200 தொகுதி அல்ல, இன்னும் கூடுதல் தொகுதிகளில் திமுக கூட்டணி பெற்றி பெறும் என்பதை உறுதியாகக் கூறிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.