திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?

Su.tha Arivalagan
Jun 26, 2026,01:53 PM IST

சென்னை: திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் வேட்பாளராகக் களம் இறக்க வேண்டும் என்ற கோரிக்கை திமுகவினர் மத்தியில் தீவிரமாக எழுந்து, வலுப்பெற்று வருகிறது. இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மு.க.ஸ்டாலின் தற்போது பதிலளித்துள்ளார்.


காலியாக இருக்கும் 6 தொகுதிகள் :


முதல்வர் விஜய்யின் திருச்சி கிழக்கு தொகுதி மற்றும் அதிமுக.,வை சேர்ந்த 5 எம்எல்ஏ.,க்கள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்ததால் தமிழகத்தில் தற்போது 6 தொகுதிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.  


பின்னணி என்ன?




இதற்கிடையே, சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான பதிலுரையின் போது, முதல்வர் சி.ஜோசப் விஜய், கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்ததை ஒரு சிறுகதை மூலம் சுட்டிக்காட்டி மறைமுகமாக விமர்சித்திருந்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சட்டமன்றத்தில் இடம் கிடைக்கவில்லை என்ற முதல்வரின் இந்த விமர்சனம் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் ஆவேசத்தையும் ஏற்படுத்தியது.


கே.என்.நேரு சொன்ன தகவல் :


முதல்வர் விஜய்யின் இந்த விமர்சனத்தை குறிப்பிட்டு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, விரைவில் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்திற்கு வந்து, எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்பார் என தெரிவித்தார். இதனால் நடக்கவிருக்கும் 6 தொகுதி இடைத் தேர்தல்களில் மு.க.ஸ்டாலின் போட்டியிட போகிறாரா? அப்படி போட்டியிட்டால் எந்த தொகுதியில் போட்டியிடுவார்? என்பது போன்ற கேள்விகள் எழுந்தன.


தலைவர்கள் ஆதரவு மற்றும் கோரிக்கை:


முதல்வர் விஜய்யின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், திமுகவின் பலத்தை நிரூபிக்கும் வகையிலும், முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று, ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலினையே வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்ற குரல் திமுகவின் மத்திய மண்டலப் பகுதியில் தீவிரமடைந்துள்ளது.  திமுகவின் மூத்த தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் இந்த யோசனைக்கு ஆதரவாக இருப்பதாகத் தெரிகிறது. மு.க.ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைவது, கட்சியின் எதிர்காலத் தேர்தல் வெற்றிகளுக்கும், மத்திய மண்டலத்தில் கட்சியின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்துவதற்கும் பெரிய அளவில் உதவும் என்று கட்சி நிர்வாகிகள் நம்புகின்றனர்.


அரசியல் முக்கியத்துவம்:

இது தொடர்பாகத் திமுக வட்டாரங்கள் கூறுகையில், மு.க.ஸ்டாலினை திருச்சி கிழக்கு தொகுதியில் களம் இறக்குவது தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வலுவான அரசியல் செய்தியைச் சொல்லும் என்றும், கட்சித் தலைவர் மீண்டும் சட்டமன்றத்திற்குத் திரும்புவதை இது உறுதி செய்யும் என்றும் நிர்வாகிகளால் தலைமைக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.


ஸ்டாலின் சொன்ன பதில்?


இருப்பினும், இது தொடர்பாகத் திமுக தலைமை இன்னும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. இந்நிலையில் இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த மு.க.ஸ்டாலினிடம் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக வெளியான தகவல்கள் பற்றி கேட்டபதற்கு, அது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதனால் இது குறித்து விரைவில் கட்சி தலைமை அதிகாரப்பூர்வமாக முடிவு செய்து, முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.