நேபாள பேரிடர்!

Su.tha Arivalagan
Aug 28, 2026,03:32 PM IST

- எழுத்தாளர் எம்.கே. திருப்பதி


அங்கு

பூகம்பமும் இல்லை

புயல் மழையும் இல்லை!


பனிப்படலம் பெயர்ந்து 

பாதாளத்தில் கவிழ்ந்திருக்கிறது!


வறண்ட ஆறு அதை 

வரவேற்கவில்லை 

வெள்ளத்தை

கொள்வதைத் தவிர 

வேறு வழியுமில்லை!


வயிற்றில் வாங்கியது

கரை வழியே 

கக்கப் பட்டிருக்கிறது!




வீடுகளும் காடுகளும் 

வீணானால் மீட்கலாம் 

உயிரையும் உணர்வையும்

யார் மீட்பது?


சித்தம் தெளிவுற

சிவனை நாடிச் சென்றோர் 

புத்தன் தேசத்தில் 

புதைகுழியில் சிக்கினர்!


நித்தம் நலம் செயும் 

நீருமின்று  

குத்தம் என்ன கண்டது?


அசல்நாடோ 

அயல்நாடோ 

ஆருயிரும் 

ஆருயிர் தானே!


மிச்சமிருக்கவர் 

மீட்கப்பட வேண்டும் 

அச்சம் போக்கியவர்

அரவணைக்கப் பட வேண்டும்!


இயற்கையை

இயற்கையாய் நோக்காது 

செயற்கையாய் நோக்குவது...


இடர்களுக்கு 

திறவுகோல்!

இயற்கையையும்

இறைவனாய் 

எண்ணுவம் கேள்!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன்)