Iran war ஈரானின் புதிய தலைவராக அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா தேர்வு
தெஹ்ரான் : ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இரண்டாவது மகனான மொஜ்தபா கமேனி, நாட்டின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரானின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரமிக்க அமைப்பான 'நிபுணர்கள் அவை' (Assembly of Experts) மொஜ்தபாவை இந்தப் பதவிக்குத் தேர்ந்தெடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தலைவராக சுமார் 36 ஆண்டுகள் பதவி வகித்த அயதுல்லா அலி கமேனி, கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 28) அமெரிக்க-இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் கமேனியின் மனைவி, மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகியோரும் உயிரிழந்தனர்.
கமேனியின் மறைவுக்குப் பிறகு, புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அதிபர் மசூத் பெசெஷ்கியன் உள்ளிட்ட மூன்று பேர் கொண்ட இடைக்கால கவுன்சில் நாட்டின் பொறுப்புகளை கவனித்து வந்தது.
யார் இந்த மொஜ்தபா கமேனி?
1969-ம் ஆண்டு பிறந்த மொஜ்தபா, ஈரானின் ராணுவ அமைப்பான 'புரட்சிகர காவல்படை' (IRGC) உடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவர் இதுவரை எந்த ஒரு முறையான அரசு பதவியிலும் இருந்ததில்லை என்றாலும், ஈரானின் உள்நாட்டு மற்றும் பிராந்திய விவகாரங்களில் திரைக்குப் பின்னால் பெரும் செல்வாக்கு செலுத்துபவராகக் கருதப்படுகிறார். இவரது நியமனம், ஈரானின் அதிகாரப் படிநிலையில் கமேனி குடும்பத்தின் பிடியைத் தொடரச் செய்யும் ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
அயதுல்லா அலி கமேனியின் உடல் ஈரானின் புனித நகரமான மஷாத்தில் (Mashhad) அடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தலைமை மாற்றம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.