Iran Flashback: அயதுல்லா கொமேனி யார் தெரியுமா?.. ஈரானுக்கும் இந்தியாவுக்கும் இடையே உள்ள லிங்க்!

Mar 01, 2026,03:45 PM IST

டெல்லி: ஈரானை ஆட்டிப்படைத்த, அந்த நாட்டின் முதல் சுப்ரீம் லீடர் அயத்துல்லா அலி கொமேனியை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அவரது பூர்வீகம் இந்தியா என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


மத்திய கிழக்கில் தற்போது கடுமையான சூழல் நிலவி வருகிறது.  மிகப் பெரிய அளவிலான போர் வெடிக்கும் அபாயத்தில் அந்தப் பிராந்தியம் உள்ளது. இஸ்ரேலின் சரமாரி தாக்குதலுக்கு சற்றும் சளைக்காமல் ஈரானும் அதிரடியாக தாக்கி வருகிறது. தான் மட்டும் போரிட்டு வந்தால் ஈரானை சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்துள்ள இஸ்ரேல், ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவையும் வருமாறு இழுத்து வருகிறது.




இதுவரை மறைமுகமாக இஸ்ரேலுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வரும் அமெரிக்கா நேரடியாக போரில் குதித்தால் மிகப் பெரிய பின்விளைவுகளை மத்திய கிழக்கு சந்திக்க நேரிடும் என்பதாலும் அது உலகப் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாலும், பெரும் பதட்ட சூழல் நிலவி வருகிறது.


அமெரிக்காவின் மிரட்டலுக்கும் இஸ்ரேலின் ஏவுகணைகளுக்கும் ஒருபோதும் பணிய மாட்டோம் என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளது ஈரான். மேலும் அந்த நாட்டின் மதத் தலைவரும், சுப்ரீம் லீடருமான அயத்துல்லா அலி கமேனி, மிகவும் தைரியமாக பேசி வருகிறார். அமெரிக்காவுக்கு ஈரானும் ஈரான் மக்களும் ஒரு போதும் பணிய மாட்டார்கள் என்று துணிச்சலுடன் அறிவித்துள்ளார்.


பலருக்கும் ஈரானின் மதத் தலைவரான கமேனிதான் அந்த நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட தலைவர் என்று தெரிந்திருக்கும். ஆனால் தற்போது உள்ளவரை விட இவருக்கு முன்பு இருந்த அயத்துல்லா அலி கொமேனிதான் உலக நாடுகளை அதிர வைத்தவர் என்பது நிறையப் பேருக்குத் தெரிந்திருக்காது. ஆனால் அந்த கொமேனியின் பூர்வீகம் இந்தியா என்றால் பலருக்கும் ஆச்சரியம்தான் ஏற்படும்.


ஈரானில் 1979-ல் நடந்த இஸ்லாமியப் புரட்சிக்குத் தலைமை தாங்கி, அதன் முதல் உச்ச தலைவரானவர் அயதுல்லா ரூஹொல்லா மூசவி கொமேனி. அவரது தாத்தாவான சையத் அகமது மூசவி, 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவின் பாராபங்கி அருகே உள்ள கின்டூர் கிராமத்தில் பிறந்தார். கின்டூர் கிராமம் ஷியா இஸ்லாம் கல்விக்குப் பெயர் பெற்றது.




சையத் அகமது மூசவி பின்னர் ஈராக்கில் உள்ள நஜாப் நகருக்கு குடிபெயர்ந்தார். இறுதியாக, 1834-ல் ஈரானின் கோமெய்ன் நகரத்தில் குடியேறினார். இங்கிருந்துதான் அவரது குடும்பம் மத ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அதிகாரம் பெறத் தொடங்கியது. மூசவி தனது பெயருடன் இந்தி என்ற பட்டத்தை சேர்த்துக் கொண்டார். ஈரானிய ஆவணங்களிலும் இந்த இந்தி என்ற குறிப்பு உள்ளது. இது அவரது இந்திய வம்சாவளிக்கு ஒரு ஆதாரமாக இருக்கிறது. இந்தி என்ற வார்த்தைக்கு பெர்சிய மொழியில் பல அர்த்தங்கள் உள்ளன.. இந்தியாவைச் சேர்ந்தவர் என்பதும் அதில் ஒரு அர்த்தமாகும்.


ஈரானின் அரசியலையே மாற்றியமைத்த கொமேனியின் ஆன்மீக ஆர்வத்திற்கு மூசவிதான் ஊக்கமாக இருந்ததாக நம்பப்படுகிறது. அயதுல்லா கொமேனி 1979-ல் ஈரானில் நடந்த இஸ்லாமியப் புரட்சிக்குத் தலைமை தாங்கியவர். மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்த ஷா மன்னரான முகமது ரெசா பஹ்லவியை 1979-ல் ஆட்சியிலிருந்து நீக்கி, ஈரான் இஸ்லாமியக் குடியரசை நிறுவினார். ஈரானின் முதல் உச்ச தலைவராகவும் பதவி வகித்தார்.


இவரது காலத்தில் இவர் ஏற்படுத்திய பரபரப்புகளுக்குப் பஞ்சமே கிடையாது. அதில் முக்கியமானது, எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு இவர் விதித்த மரண தண்டனை. கொமேனியின் தடை காரணமாக இங்கிலாந்தில் போய் தஞ்சமடைந்தார் ருஷ்டி என்பது நினைவிருக்கலாம்.


1989-ல் கொமேனி காலமானார். ஈரானின் மிக உயர்ந்த அரசியல் மற்றும் மதப் பதவியில் இருந்தபோதிலும், கொமேனி டெஹ்ரானில் ஒரு சாதாரண, ஒற்றை மாடி வீட்டில்தான் வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது. இன்றும் அவரது வீடு எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் காணப்படுகிறது. 


இந்த வீட்டை சையத் மஹ்தி இமாம் ஜமாஹ் என்பவர் அவருக்கு இலவசமாக வழங்கினார். ஆனால், கொமேனி அதற்கு ஆயிரம் ரியால்களைக் கட்டணமாக செலுத்திய பிறகே வாங்கிக் கொண்டாராம். இந்த வீடு அதன் எகிப்திய பாணி அலங்காரங்களுக்காக தனித்துவமாகத் தெரிகிறது. இதில் இரண்டு சிறிய அறைகள் இருந்தன. பின்னர், அவர் தனது ஆதரவாளர்களை சந்தித்து உரையாற்றிய மண்டபத்துடன் இணைக்க ஒரு சிறிய பாதை கட்டப்பட்டது.


தனது சொந்த ஆடம்பரத்திற்காக மக்கள் பணம் செலவழிப்பதை கொமேனி விரும்பவில்லை. அவரது வீட்டின் சுவர்களில் ஓடுகளை பதிக்க ஆதரவாளர்கள் முன்வந்தபோதும், தனது வீட்டின் அலங்காரத்திற்காக பொதுப் பணத்தை பயன்படுத்த அவர் மறுத்துவிட்டார்.


கொமேனியின் வாரிசான அலி கமேனி இப்போது ஈரானை வழிநடத்தி வருகிறார். நேற்று தொலைக்காட்சி உரையில், அமெரிக்காவின் அழுத்தங்களுக்கும் இஸ்ரேலின் ஏவுகணைகளுக்கும் ஈரான் தலைகுனியாது என்று அவர் அறிவித்தார். ஈரானும் இஸ்ரேலும் ஏழாவது நாளாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருக்கும் நிலையில் அவரது இந்த அறிவிப்பு வெளியானது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Sripriya Story: தன்னம்பிக்கை கதை.. விளக்கேற்றிய விரல்கள்!

news

Cell Broadcast Alert System: உங்க செல்போனில் சத்தத்துடன் மெசேஜ் வந்தா பயப்படாதீங்க.. டெஸ்ட்டிங்!

news

மதுரை குலுங்கக் குலுங்க.. பச்சைப் பட்டுடுத்தி.. வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்

news

மே 1.. ரத்தத்தால் எழுதப்பட்ட தியாக வரலாற்றின் நினைவுச்சின்னம்!

news

May 1: 'ஒவ்வொரு வேர்வைக்கும் வெற்றி வேர் வைக்கும்!'

news

உலகத் தொழிலாளர்களே.. சிகாகோவில் ஒலித்து உலகெங்கும் பிரதிபலித்த உரிமைக் குரல்!

news

ஆற்றில் இறங்கிய அழகனைப் பார்!

news

RS Kumar Poem: தூரத்து வானத்தில்.. மங்கிய வெளிச்சத்தில்.. ஒன்றல்ல ஓராயிரம்

news

ஏப்பா.. பிள்ளைகளுக்கு வலிக்காம காது குத்துப்பா.. (கோடாங்கி 11)

அதிகம் பார்க்கும் செய்திகள்