Monday Motivation: நரியும் திராட்சையும்!

Su.tha Arivalagan
Mar 16, 2026,10:43 AM IST

- முனைவர் தி. தங்கலட்சுமி


ஒரு நாள் காட்டில் இருந்து அம்மா நரியும் குட்டி நரியும் இரை தேடி ஊர்ப்பக்கம் வந்தன. 


அப்போது குட்டி நரி, தன் கண்ணில்பட்ட திராட்சை தோட்டத்தைக் காட்டி, 'அம்மா... அம்மா... நாம் இந்தப் பழங்களைச் சாப்பிடலாமா?' என்று ஆசையோடு கேட்டது.


அதற்கு அந்த அம்மா நரி, நானும் உன்னைப் போல் குட்டியாக இளமையில் இருந்தபோது இதே தோட்டத்திற்கு வந்து இப்பழங்களைப் பறிப்பதற்கு எம்பிக் குதித்து குதித்து, பலமுறை முயன்றுள்ளேன்.


அப்படியும் அந்தப் பழங்கள் எனக்குக் கிடைக்கவில்லை. உடனே நான் “சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்” என்று கூறி இங்கிருந்து போய்விட்டேன். 


இதைதான் ஔவை கூறி உள்ளாரே, "கிட்டாதாயின் வெட்டென மற" என்று அம்மா நரி சொன்னது. 


உடனே குட்டி நரி, சரி அம்மா! இப்போ வாங்க! நாம் மீண்டும் முயற்சி செய்யலாம், என்று அழைத்தது.




நீங்கள் அந்த திராட்சைப் பந்தலில் நிறைய பழங்கள் உள்ள இடத்திற்கு நேராக சென்று அசையாது நில்லுங்கள் என்று சொல்லி விட்டு, சிறிது தூரத்தில் இருந்து ஓடி வந்து தன் அம்மா நரியின் முதுகில் தன் கால்களை வைத்து ஏறி எம்பிக் குதித்தது. 


அப்படிச் செய்ததில் குட்டி நரியின் வாயில் ஒரு கொத்து திராட்சை பழங்களும் சிக்கின. 


அந்தக் குட்டி நரி வேகமாக வந்து திராட்சைப் பந்தலில் மோதியதில் நிறைய பழங்கள் தரையில் ஆங்காங்கே சிதறி விழுந்தன.


அம்மா நரி மிகவும் மகிழ்ச்சியாகத் தன் குட்டியைப் பாராட்டிக் கொஞ்சியது.  அப்போது குட்டி நரி சொல்லியது, இதைத்தான் திருவள்ளுவர், "முயற்சி திருவினையாக்கும்" என்று சொல்லி உள்ளார் என்றது.


குழந்தைகளே! குட்டி நரியின் அறிவுத்திறனை நாம் "தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்" என்ற பழமொழியோடு ஒப்பிட்டு மகிழ்வோம்! நாமும் முயற்சியோடு வாழ்வோம்!


(கட்டுரையாளர் தி. தங்கலட்சுமி.. அண்ணாமலையாரின் திருவடி நிழலில் தஞ்சம் புகுந்து, திருவண்ணாமலையின் தெய்வீக மலை தரிசனத்தின் அருட்பார்வையின் கீழ் வதிந்து சுவாசிக்கும் ஜீவன்! பேரறிவின் கீழ் அடிபணிந்து வாழும் சிற்றறிவு ஜீவி! அன்னை தந்தையர், உடன் பிறந்தாரோடு ஆனந்தமாக இன்பம் களிக்கும் பிறவி! இணையவழியில் ஈடுயிணையில்லா தொன்மைத் தமிழ்மொழியின் நயம் எடுத்தியம்பும் ஆசிரியை! தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பவர்).