டெல்லி பனிமூட்டத்தால் விபரீதம்.. அடுத்தடுத்து மோதிக் கொண்டு தீப்பிடித்த வாகனங்கள்
டெல்லி: டெல்லி-ஆக்ரா விரைவுச் சாலையில் (யமுனா விரைவுச் சாலை) செவ்வாய்க்கிழமை அதிகாலை அடர்ந்த பனிமூட்டம் காரணமாக ஏழு பேருந்துகள் மற்றும் மூன்று கார்கள் மோதிய பயங்கர விபத்தில் குறைந்தது நான்கு பேர் உயிரிழந்தனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர்.
கடும் பனி மூட்டம் காரணமாக, எதிரில் வரும் வாகனத்தைப் பார்க்கம் திறன் மிகவும் குறைவாக இருந்ததால், வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்டன. மோதலுக்குப் பிறகு சில வாகனங்களில் தீப்பிடித்ததால் பயணிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்லோக் குமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியபோது, அடர்ந்த பனிமூட்டமே மோதலுக்குக் காரணம். மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன. சுமார் 25 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஆனால் யாருக்கும் கடுமையான காயங்கள் இல்லை. மற்ற பயணிகளை அரசு வாகனங்கள் மூலம் அவர்களின் வீடுகளுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மதுரா மாவட்ட ஆட்சியர் சந்திர பிரகாஷ் சிங் கூறுகையில், இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். விபத்து குறித்து அறிந்ததும், உடனடியாக 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் மற்றும் 14-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டன. விபத்துக்கான காரணம் பின்னர் விசாரிக்கப்படும். தற்போது நிவாரணப் பணிகள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கே முதலிடம் என்றார்.
டெல்லியில் கடும் பனி மூட்டம் கடந்த சில நாட்களாக நிலவி வருகிறது. இதனால் இயல்பு வாழ்க்கை காலை வேளையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெறும் பனிமூட்டம் மட்டுமல்லாமல் காற்றின் மாசு காரணமாக புகை மூட்டமும் டெல்லியை தொடர்ந்து வாட்டி வதைத்து வருவது குறிப்பிடத்தக்கது.