பார் போற்றும் பாரதியே.. பா ஆயிரம் தந்திடு!

Su.tha Arivalagan
Dec 13, 2025,02:46 PM IST

- இரா.மும்தாஜ் பேகம் 


1.முண்டாசுக் கவிஞனே!

முக்காலம் அறிந்தவனே!

முறுக்கு மீசை பாரதியே!

முருவியல் கவிஞனே!


2.புரட்சி பாக்களால்

பூக்களை எழுப்பி,

போருக்கு அனுப்பிய

புரட்சிக்கவிஞனே


3.விஞ்ஞானத்தில் விண்ணை தொடுவோம்.

சரித்திரத்தில் சாதனை செய்வோம்.

சந்திரனை கண்டு தெளிவோம்.

என்று,

தீர்க்கதரிசனம் சொன்னாய்... தீவிரவாதத்தால் உலகம் அழியும் என்று 

ஏன் சொல்ல மறந்தாய்?




4.எட்டு திக்கும் செல்வீர்

கலைச் செல்வங்கள் யாவும்

கொணர்ந்திங்கு சேர்ப்பீர் என்று

கொக்கரித்த கவிஞா!

எட்டு திசையிலும் இழிநிலைகள் வருமென

ஏன் சொல்ல மறந்தாய்?


5.பெண்ணுரிமை பற்றி 

பேசித் திரிந்த கவிஞா, வன்மத்தால் பெண்ணினம்

அழியும் ‌என்று

வசைபாடி வைக்காமல் 

ஏன் சென்று மறைந்தாய்?


6.குயில் பாட்டு பாடிவைத்த கவிஞா

குண்டு பட்டு அழிவோம்

என்று ஏன் கூற மறந்தாய்?


7.பாஞ்சாலிசபதத்தை

பாடி வைத்தாயே,

பாரதத்தாயின் சாபத்தை பாடி வைக்காமல் 

ஏன் சென்று மறைந்தாய்?


புரட்சியை நதிகளாக்கி.

புண்ணிய கடல்கள் என்றாய்.

வறட்சியை விரட்டி வைக்க

வயிற்றுக்கு சோறிட வேண்டும் என்றாய்.


ஏ, பாரதியே!

பழியில்லா சமுதாயம்

பார்க்கத்தான் துடிக்கின்றோம்.

மொழியில்லா உணர்வுகளை

மௌனத்தால் வடிக்கின்றோம்.

வழியில்லா ஏழைகளின்

வரலாற்றை மாற்றிடவே.

விழிகளில் கண்ணீரால்

வினாக்களை தொடுக்கின்றோம்.


விடுதலைக்கு கவிதை பாடி,

விழிப்புணர்வு எழுச்சி தந்தாய். சீர்கெட்டதலைமையில் இன்று

சிக்குண்ட தமிழர்களை

பா போர்க்கொண்டு வென்றிட

பூமியில் மீண்டும் வந்துவிடு.

கவிஞா நீ வந்து விடு புதுக்கவிதைகள்

ஆயிரம்....ஆயிரம் தந்திடு. 

என் மனதில் தந்திடு....!


(எழுத்தாளர் இரா. மும்தாஜ் பேகம், திருச்சியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற ஆசிரியை)