வலிகள் நிறைந்த வார்த்தைகளோடு.. தேசிய பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்!

Su.tha Arivalagan
Jan 24, 2026,04:21 PM IST

- கவிஞர் க.முருகேஸ்வரி


பாரதி கூறினான்

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை.......


பட்டங்கள் ஆள்வதும் 

சட்டங்கள் செய்வதும் 

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.....


அவனைத் தொடர்ந்து...

மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா....

பெண்கள் நாட்டின் கண்கள்.....

ஆணும் பெண்ணும் சமம்....




ஓகோ... அப்படியென்றால் பெண் பிள்ளைகள் படிக்க வேண்டுமோ....


சரி படிப்போம்...

எட்டாம் வகுப்பு வரை படித்தோம்....

பிறகு திருமணம்...

பத்தாம் வகுப்பு வரை படிப்பு...

பன்னிரண்டு...


இல்லை இல்லை.... பட்டப் படிப்பு...... பாரதி சொல்லி விட்டான்..


ஆண்களைப் போலவே நாங்களும் வேலைக்கு செல்வோம்....


அப்புறம் அதே திருமணம்....

நாம் தான் வேலைக்குப் போகிறோமே!!!!!

அதிகாலை முதல் வேலைக்குக் கிளம்பும் வரை அனைத்து வேலைகளையும் செவ்வனே செய்து விட்டு 

வேலை செய்யும் இடத்திலும் விழுந்து விழுந்து வேலை செய்து....

வேலை முடித்த கையோடு வீட்டிற்கு வந்து இரவு வரை கடமைகளை முடித்து விட்டு..... ரிப்பீட்டு......

இன்னும் சில பெண்கள் சம்பாதிக்கும் பணத்தையும் கணவனிடம கொடுத்துவிட்டு அடியும் மிதியும் வேற.....


ஒரு சில பெண்கள் போற்றப்படலாம்....

பாதுகாக்கப்படலாம்....

தலைமையாக தலைசிறந்து விளங்கலாம்....


மற்ற பெண்களின் நிலை.....

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு??????

அடுப்பை மட்டுமே ஊதியிருக்கலாமோ????

அப்படித்தான்.....


பெண்களுக்கு உரிய பலவற்றை வகுக்கத் தெரிந்த ஆண்களுக்கு....


பெண் மென்மையானவள்...

பெண் பூப்போன்றவள்...

என்று கவிதை மட்டுமே வடிக்கத் தெரிந்த ஆண்களுக்கு.....


பெண்ணுக்கும் இரண்டு கைகளும்....

இரண்டு கால்களும் தான் இருக்கின்றது என ஏன் தெரியவில்லை...


இரும்பினால் செய்யப்பட்டவில்லை.....

எதையும் தாங்கும் இதயம் என்று பெருமை வேறு...


எங்களுக்கு எந்தப் பெருமையும் வேண்டாம்.....நாங்களாகவே இருந்து கொள்கிறோம்...        

எங்களை வாழ விடுங்கள்.......

மதிக்க வேண்டாம்...மிதிக்காதீர்கள்.....

போற்ற வேண்டாம்...

தூற்றாதீர்கள்.......


வலிகள் நிறைந்த வார்த்தைகளோடு...

தேசிய பெண் குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள்.... பெண் குழந்தைகளே!!!!!


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).