நான் விரும்பும் வகுப்பறை
- ஆ.வ. உமாதேவி
சாளரத்தின் வழியே பல கனவுகள்!
அக்கனவுகளை நினைவாக்க -
என்னை வளைக்கும் இடமாய் இல்லாமல்....
நான் வளையும் இடமாய் வேண்டும் என் வகுப்பறை!!!
கூண்டுக்கிளியாய் அடைப்பட்டு கிடக்காமல்
அக்னிச்சிறகுகள் அணிந்து
சின்னதாய் சிதறும் தீப்பொறியைக்கூட
சிகரத்தில் சுடராக்க வேண்டும்
என் வகுப்பறை!!!
போராடத் திராணியில்லாமல் மனம் ஒடிந்து ...
நான் விசும்பும் நொடிகளிலும்
கைகோர்த்து என்னை ஆதரிக்கும் தோழிகள் நிறைந்த இடமாய்
இருக்க வேண்டும் என் வகுப்பறை !!!
தொட்டு விடாத தூரத்தில் இருக்கும்
இலக்குகளை அடைய சாத்தியக்கூறாகவும் ...
தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் இலக்குகளை..
இலகுவாக்க முயற்சிகளை முடுக்க ஆசிரியர்கள் உள்ள இடமாய் வேண்டும்
என் வகுப்பறை !!!
எழுத எழுத முடிவில்லாமல் நீளும்
என் வகுப்பறை கனவுகளை
தற்காலிகமாய் முடித்துக் கொள்கிறேன் -
வைக்காது விட்ட முற்றுப்புள்ளியுடன்....!
(ஆ.வ. உமாதேவி, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாக இருக்கிறார்)