மஞ்சணத்தி பூவே இளம் பிஞ்சு குருவிகளே

Su.tha Arivalagan
Apr 04, 2026,02:39 PM IST

- கவிஞர் க. முருகேஸ்வரி


மணம் கமழும் மலரும் நினைவுகள் 


சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு போல வருமா 

என்ற‌ பாடல் வரிகளைக் கேட்கும் போது எல்லாம் எனக்கு நான்‌ பிறந்து வளர்ந்த என் கிராமமும்...


சிறு வயதில் கிராமத்து வாழ்க்கையை  நான் ரசித்து அனுபவித்த மலரும் நினைவுகளும் என் மனதில் மலர்ந்து மணம் கமழும்.....


நினைத்து நினைத்து சிலாகித்துப் போவேன்...


ஒவ்வொரு நினைவுகளாக அசை போட ஆரம்பிப்பேன்....


அப்படியான‌ நினைவுகளில் ஒரு சில..


எங்கள் கிராமத்தில் பத்து, பன்னிரண்டு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் நாங்கள் அனைவரும் சேர்ந்து அடித்த லூட்டிகள் கொஞ்சம் நஞ்சமல்ல....


முதலில் நினைவுக்கு  வருவது....

ஆத்துல குளிக்கப் போய் அம்மா கிட்ட அடி வாங்குனது.




எங்க அம்மா எங்கேயும் அனுப்ப மாட்டார்கள். தெரியாமல் தான் செல்ல வேண்டும்...


ஆகையால் சிறு வயதில் நான் வாங்கிய அடி சும்மா வேற லெவல். டமால் டுமீல்....

எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே....என்ற வடிவேலு காமெடி போல தான்.


ஆத்துல தண்ணி நெறய போச்சுன்னா பள்ளிக்கூடம் விட்டதும் வீட்டுக்கு போகாம... நேராக ஆத்துக்கு போவோம். பைக்கட்ட தூக்கிப்  போட்டுட்டு ஆத்துல ஆச தீர நீச்சல் போட்டி எல்லாம் விளையாடி முடிச்சுட்டு வீட்டுக்கு போனா... எங்கம்மா என் கண் சிவப்பா இருக்குறத பார்த்து கண்டுபிடிச்சு போடுவாங்க.....


அப்புறம் வேப்பம் பழம் பெறக்க போவோம். ஆம்பளப் பயலுக மரத்தில‌ ஏறி உலுக்க... நாங்க கீழ‌ விழுற பழத்தை பெறக்குவோம்.


வாழைத்‌ தோட்டத்துக்குள்ள புகுந்து தோட்டத்துகாரங்களுக்கு தெரியாம வாழப்பூவ ஒடச்சி‌ உரிச்சு அதுல இருக்குற குருத்த தின்போம். தோட்டத்துக்காரர் வெரட்டுனா விழுந்து எந்திரிச்சு ஓடுவோம்


அடுத்த கட்டமாக கன்னங்கரேலென்று இருக்கும் மஞ்சணத்திப் பழம்.... பிடுங்கி தின்போம். அதன் பூக்கள் வெள்ளை வெளேரென்று அழகாக இருக்கும். அதைப் பறித்து விளையாடுவோம்....


எங்க நண்பர்களில் ஒருவர் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்வான்.


அவனைப்‌ பார்க்க செல்வோம். அவன் கிணற்றில் இருந்து கமலையில்  தண்ணீர் இறைத்துப் 

பாய்ச்சுவான். அங்கு இருக்கும் கொடிக்காய் மரத்தில் கொடிக்காய் பறித்து தின்போம்.


பின்னர் கடலை பிடுங்க

கடலை ஒடைக்க 

கோரைக்கிழங்கு எடுக்க

என நீண்டு செல்லும் எங்கள் அனுபவம்...


அதிகாலையில் பூப்பறிக்க செல்லும் போதும் அம்மாவின் அடியும் திட்டும் ஏராளம்.


எல்லோரும் சந்தோஷமாக செல்வார்கள். நான் மட்டும் பயத்துடனே வீட்டுக்குத் தெரியாமல் இத்தனை அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன்....


எங்களுக்கு பிடித்த மாதம்

கார்த்திகை மாதம்...

மொறைப் பொண்ணுங்களுக்கு ஒட்டுப்புல் தேய்க்கிறத...

பதிலுக்கு பொண்ணுங்க செந்தட்டில அடிக்கிறது...

மாம்புலி சுத்துறது....

கிளியாஞ்சட்டி ஏத்துறது.....


மாட்டுப்பொங்கலுக்கு மாமன் மொற உள்ளவர்களுக்கு எல்லாம் மஞ்சத்தண்ணி ஊத்துறது.... கூடவே குளுதாடித் தண்ணியையும் ஊத்துறது....


என இப்படி சரவெடியாய் போகும் எங்க கிராமத்துப் பண்டிகை நாட்கள்.


உப்பு வச்சு விளையாடுறது....

கூட்டாஞ்சோறு....

கண்ணாமூச்சி....

நொண்டி....

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் எங்களின் குழந்தைப் பருவ கொண்டாட்டங்களை குதூகலத்துடன்....


(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா  போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).