சுதந்திரம் தேவை!

Su.tha Arivalagan
Dec 20, 2025,12:37 PM IST

- கவிஞர் சு. நாகராஜன்


பல நூற்றாண்டுகளுக்கு முன்பு

பாரத தாய் அடிமையானாள்

ஆங்கிலேயரிடம்!

உரிமைகள் பறிக்கப்பட்டன

திறமைகள் தடுக்கப்பட்டன

மொழிகள் மறக்கப்பட்டன

வீர முழக்கமிட்ட என்னுயிர்

தோழர்களோ!

சிறையில் அடைக்கப்பட்டனர்!

தூக்கில் போடப்பட்டனர்

நாடு கடத்தப்பட்டனர்

தலை குனியவில்லை

தன்னுயிர் பொருட்படுத்தவில்லை

மிரண்டான் ஆங்கிலேயன்

விட்டுச் சென்றான் – என்

தாய்த் திருநாட்டை

மகிழ்ந்தான் சுதந்திரம் 

பெற்று விட்டோம் என்று

எங்கே சுதந்திரம்




ஒன்றுபட்டு பெற்றோம்

சுதந்திரம் என்று

வீரமுழக்கமிடும் இவர்களிடம்

எங்கே ஒற்றுமை உள்ளது


சாதி இரண்டொழிய வேறில்லையென்று

கூக்குரலிட்டான் பாரதி- அன்று

சாதி சங்கங்கள் ஊர்வலம் அல்லவோ

நம் காதில் கேட்கிறது இன்று


கத்தியின்றி இரத்தமின்றி 

யுத்தமில்லா பெற்ற விடுதலை- இன்று

கத்தியோடும் இரத்ததோடும்

யுத்தம் இங்கே நடக்குது


தெருத்தெருவாய் கோஷமிட்டு 

வீரமுழக்கமிட்டான் இந்தியந் இன்று

தெருத்தெருவாய் வேஷமிட்டு

ஏமாற்றுகிறான் மக்களையே


ஆம்

இனியொரு சுதந்திரம் தேவை

என் தாய் திருநாட்டிற்கு

சாதி சண்டையை உண்டாக்கும்

கயவர்களிடம் இருந்து

மதக்கலவரத்தை ஏற்படுத்தும் 

மதவாதிகளிடம் இருந்து

என்னுயிர் மக்களை கொல்லும்

தீவிரவாதிகளிடம் இருந்து

முடியும் நம்மால் முடியும்

மாற்றங்கள் நம்மிடம் இருந்தே தொடங்கட்டும்


ஜெய்ஹிந்த் !


(கவிஞர் சு நாகராஜன், கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார்)