என் இனிய வருடமே 2025!

Su.tha Arivalagan
Jan 02, 2026,12:06 PM IST

- எம்.கே.திருப்பதி


சிறப்பான ஆண்டு என்று

சீற முடியவில்லை என்றாலும் 


வழமை போல் வாழ்த்தலாம் 

வாய் நிறைய!


நாட்கள் 365ம் 

நல்ல கவிதையாய் 

நயம்பட தோன்றினாலும் 


இலக்கண பிழையாய் சில வரிகள்

இருக்கத்தான் செய்தது!

எதுகை மோனைகள்

முதுகை காட்டியது!

இயைபு சற்று 

இடம் மாறியது!




மொத்த மாதத்தில் 

ஒத்த மாதம் 

ஒத்தடம் கொடுத்தது!


உறங்கிக் கிடந்த

எழுத்துப் பசி 

சூரியத் தாமரையாய் 

சுள்ளன மலர்ந்தது!


சில மாநாட்டு சந்திப்பு 

மனச்சுமை தீர்த்தது!

கிளர்ச்சியைக் கூட்டி 

கீழடி ஈர்த்தது!

 

ஈராயிரம் ஆண்டுகள் முன் 

இருந்த தமிழனின்

தங்கப் பயன்பாடு 

நெஞ்சுக் கூட்டை

நெகிழச் செய்தது! 


திடீர்நட்பு

தித்தித்தது

இலக்கியநட்பு

இறுமாப்பு கூட்டியது!


நாட்டு நடப்பை

நவிலப் போனால் 

நாலும் நடந்தது 

அதன் கூடவே 

நாளும் நடந்தது!


தீ அவை போல் 

தீயவை கண்டேன்!

நாட்டார் சபையில்

நல்லவும் உண்டேன்!


இந்தியப் பேரரசின் 

எழுச்சி தெரிந்தது

உலகப் பேரரசுகள் 

ஒரு சேர வாழ்த்தியது!


நெறியில்லா வரிக்கும்

சரி சொன்ன தேசம் 

நரி கூட்டம் பார்த்து 

உரக்க நகைத்தது !


அண்டை தேசத்தை 

அடித்து துவைத்தது!

உலகின் குருவாய் 

உச்சம் தொட்டது!


வலிய ராக்கெட் 

வட்டப்பாதை கண்டது!

வகை வகையான ஏவுகணைகள் 

வானில் அலைந்தது!


தேச உணர்வும் இந்த

நேசன் உணர்வே!

தேச வளர்ச்சியும் 

என் வளர்ச்சியே!


அவ்வகை நோக்கினால் 

ஆண்டு 25 செவ்வகை!

புலிப்பாய்ச்சலின் 

புதுப்பாய்ச்சல்!


(எழுத்தாளர் எம்.கே. திருப்பதி.. திருப்பூரைச் சேர்ந்தவர். நூல் படிப்பதில் ஆர்வம். அதன் நீட்சியாக கொஞ்சம் கொஞ்சம் எழுத்துப்பணி.  98 ஆம் ஆண்டிலேயே 4 சிறுகதை, கவிதைகள், துணுக்குகள் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கிறது. திருச்சி ஆல் இந்தியா வானொலி நிலையத்தில் கவிதை வாசித்திருக்கிறார். காவியக் கவிஞர் வாலி. கிரைம் நாவல் மன்னன் ராஜேஷ்குமாரின் தீவிர ரசிகன். திருவண்ணாமலை தடங்கள் பதிக்கும் பன்னாட்டு தமிழ்ச் சங்கத்தில் நடந்த பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)