மலரே !

Su.tha Arivalagan
May 14, 2026,10:21 AM IST

- ரதிதேவி


மறுநாள் என்ற  ஒன்றில்லை.

ஆயினும் மாறாத சிரிப்புடன் இருக்கிறாய்

பிள்ளை போல...


மகரந்தம் தாங்கும் தாய்

உனக்கு 

மகப்பேறு பார்க்க இன்று வரை

ஆள் இல்லை...


மிதித்து செல்லும் வண்டுக்கு கூட 

வண்டி வண்டியாய் வழங்குகிறாய் 

வழவழப்பாய் தேனை...





எவர் சூடாமல் போனாலும், 

சுரத்தில்லாத வாழ்வை எண்ணி 

என்றும் ஏங்கியதில்லை

மனிதர் போல....


யார் வாழ்த்தாவிட்டாலும்

மணம் வாடாமல் வாழ்த்துகிறாய்.


உன்னை மங்கையோரோடு 

ஒப்பனை செய்கிறான் ஓர் கவிஞன் 


பூவையின் பூ வே 

இறைவனின் 

இதயமும் 

பாதமும் 

எந்நொடியும் தொடும் மலரே ...



நீயின்றி 

இவ்வுலகில் 

பூஜை ஏதும் நிகழுமோ ..


முகையாக

அரும்பாக

மொட்டாக

அலராக

மலராக 

பூ வாக

உந்தன் நிலைகளோ


மலரின் மலரே!