கோடு தாண்டாத தூரம்!
- ப. வினு
அவன்
என்னைத் தோழி என்கிறான்;
நான்
அவனை என் உலகமென்கிறேன்.
அவன் தோள்மீது
நான் சாயும் தருணங்கள்
அவனுக்கு வெறும்
நட்பின் ஆறுதல்...
எனக்கோ
ஆயுள் வரை நீடிக்கத் துடிக்கும்
காதலின் மயக்கம்!
அவன்
எல்லாவற்றையும் இயல்பாய்ப் பேசுகிறான்,
என் கண்களுக்குள் வழியும்
காதலைத் தவிர.
அவன் விரல்கள்
என் விரல் கோர்க்கும்போது
நட்பின் கதகதப்பு மட்டுமே
அவனுக்குத் தெரிகிறது...
என் நெஞ்சில் அடித்துக்கொள்ளும்
புயலின் சத்தம்
அவனுக்குக் கேட்பதேயில்லை.
சொல்லிவிட்டால்
இந்த நட்பும் போய்விடுமோ என்ற பயம்...
சொல்லாமல் விட்டால்
என் காதல் செத்துவிடுமோ என்ற ஏக்கம்!
அவன் கட்டிய
நட்பு என்னும் அழகிய கூண்டிற்குள்,
பறக்க முடியாமல் தவிக்கிறது
என் காதல்!
(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)