​மௌனத்தின் அளவுகோல்

Su.tha Arivalagan
Jul 31, 2026,01:00 PM IST

- ப.வினு


​நீ

வார்த்தைகளைச் செலவழிப்பதில்

அவ்வளவு கஞ்சத்தனம் செய்கிறாய்.

​ஒரு சிறிய புன்னகை,

லேசான தலையசைப்பு,

அல்லது 'ம்' என்ற ஒற்றை எழுத்து—

இவ்வளவுதான்

உன் அன்றாட உரையாடல்.

​ஆனால்,

நீ பேசாமல் விட்டுவிடும்

அந்தப் பெரிய இடைவெளிகளில்தான்

நான் அலையாய் அடித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.




​நீ அளந்து பேசும்

ஒவ்வொரு சொல்லும்

அவ்வளவு கனமாக இருக்கிறது.

அவற்றைத் தூக்கிக்கொண்டு திரியவே

எனக்கு ஒரு வாழ்நாள் தேவைப்படுகிறது.

​அதிகம் பேசும் இந்த மனிதர்களின் உலகில்

உன் மௌனம் ஒரு தீவைப்போலத் தனித்திருக்கிறது.


​எனக்குத் தெரியும்,

நீ குறைவாகப் பேசுவது

சொற்கள் இல்லாததால் அல்ல

வார்த்தைகளின் ஆபத்தை

நீ நன்றாக அறிந்திருப்பதால்!


(கொடைக்கானலைச் சேர்ந்த ப. வினு 3ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். கொடைக்கானலில் கார் ஓட்டுநராக வேலை செய்கிறார். தமிழ் மொழி மீதான அளவற்ற காதலால், எழுத ஆரம்பித்து இன்று படைப்பாளியாக மிளிர்கிறார்)