இந்தியா நியாயமா ஜெயிக்கலைங்க.. மூக்கால் அழும் பாகிஸ்தான் முன்னாள் பவுலர்!

Su.tha Arivalagan
Mar 02, 2026,05:16 PM IST

சென்னை: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறாது என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் முகமது அமீர் கணித்திருந்தார். ஆனால், மேற்கிந்திய தீவுகள் அணியை வாரிச் சுருட்டி அரை இறுதிக்கு இந்தியா முன்னேறியதைத் தொடர்ந்து அமீரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


டி 20 உலகக் கோப்பைத் தொடரில் தென் ஆப்பிரிக்காவிடம் இந்தியா தோல்வியைத் தழுவியதால் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அடுத்து வரும் போட்டிகளில் அதிரடியாக வென்றேயாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், 

சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு செல்லும் என்றும், இந்திய அணி வெளியேறும் என்றும் அமீர் கூறியிருந்தார். 




ஆனால் நேற்று கொல்கத்தாவில் நடந்த போட்டியில், சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டத்தால் (97 ரன்கள்) இந்தியா வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் தனது கணிப்பு தவறான பிறகும் கூட, மீசையில் மண் ஒட்டாத குறையாக, இந்திய அணியின் வெற்றி குறித்து சர்ச்சையாக பேசியுள்ளார் அமீர்.


மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர், ஷிம்ரன் ஹெட்மயர் அவுட் ஆன விதம் சர்ச்சைக்குரியது என்றும், அவர் அவுட் இல்லை என்றும் அமீர் கூறியுள்ளார். "ஹெட்மயர் அவுட் இல்லை என்று நான் நினைக்கிறேன். அவர் மட்டும் களத்தில் இருந்திருந்தால் மேற்கிந்தியத் தீவுகள் அணி, 220-230 ரன்கள் எடுத்திருக்கும், இந்திய அணி இந்நேரம் தொடரை விட்டு வெளியேறியிருக்கும் என்று அவர் புலம்பியுள்ளார்.


அதேசமயம், சஞ்சு சாம்சனின் ஆட்டத்தை அமீர் பாராட்டினாலும், இந்திய அணி ஒட்டுமொத்தமாக சிறப்பாக விளையாடவில்லை என்றும் கரித்துக் கொட்டியுள்ளார். பும்ராவைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவதாகவும், இந்திய அணியின் ஃபீல்டிங் மோசமாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


முன்னதாக, இந்திய வீரர் அபிஷேக் சர்மாவை 'ஸ்லாகர்' என்று அமீர் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு சென்றதால், அமீரின் பழைய கருத்துக்களைப் பகிர்ந்து ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.


அதான் அரை இறுதிக்குப் போயிட்டோம்ல.. பாராட்டி நாலு வார்த்தை சொல்லுங்க பாய்!