Parabhava New Year 2026: பராபவ தமிழ் புத்தாண்டு.. சித்திரையே வருக.. நலன் பல பொழிக!
- ஸ்வர்ணலட்சுமி
2026 ஆம் ஆண்டின் தமிழ் புத்தாண்டு, சித்திரை 1ஆம் நாள், விசுவாவசு வருடம் நிறைவடைந்து பராபவ வருடம் ஏப்ரல் 14ம் தேதி செவ்வாய்க்கிழமை பிறக்கிறது.
சித்திரை மாதம் 1ஆம் தேதி மேல் நோக்குள்ள சதயம் நட்சத்திரம் மற்றும் ரிஷப லக்னத்தில் காலை 09: 32 மணிக்கு பிறக்கிறது.
பராபவ வருடம்: இது தமிழ் நாட்காட்டியின் 60 வருட சுழற்சியில் 40-வது ஆண்டாகும். சித்திரை மாதம் முதல் நாளான தமிழ் புத்தாண்டு 20 26 தமிழர்களின் பாரம்பரிய புத்தாண்டு நாளாக கொண்டாடப்படுகிறது.
இந்த வருடத்தின் சேனாதிபதியாக சந்திரன் வருகிறார்.எனவே, உலகெங்கும் பெண்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். அவர்கள் பெரிய பதவிகளில், பொறுப்புகளில் அமர்வார்கள். விவசாயம் தழைக்கும்.
புத்தாண்டு கொண்டாட்டம் :
தமிழ்நாட்டில் இந்த நன்னாளில் வீடுகளில் சுத்தம் செய்து, கோலம் இட்டு, மாவிலை தோரணம் கட்டி, வீட்டு வாசலில் மஞ்சள் குங்குமம்,அரிசி மாவு ஆகியவற்றால் அழகான வரவேற்பு வாசல் அமைப்பார்கள்.புதிய உடைகளை அணிந்து, குழந்தைகளுக்கு புதிய உடைகளை அன்பளிப்பாக தந்து,வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவார்கள்.
ஒரு அகலமான தட்டில் மா, பலா, வாழை எனும் முக்கனிகளையும், இதர பழ வகைகள், மலர்கள், விசிறி, பணம், நகைகள், பட்டாடைகள் ஆகியவற்றை அலங்காரப்படுத்தி அதற்கு முன்னால் ஒரு கண்ணாடி வைத்து,இந்த தட்டில் உள்ளவற்றை காலை எழுந்தவுடன் அந்த கண்ணாடியில் பார்த்து வணங்குவது, இந்த வருடம் முழுவதும் அனைத்து செல்வ செழிப்புகளும் நிறைந்திருக்க பிரார்த்தனை செய்வது சிறப்பு.
கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது சிறப்பு.இந்த வருடம் முழுவதும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கப்பெற்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து இந்த புது வருடத்தில் அடி எடுத்து வைப்போம்.
மேலும் பாரம்பரிய உணவுகளான மாங்காய் பச்சடி, இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு,காரம், துவர்ப்பு ஆகிய அறுசுவைகள் கலந்த உணவுகளை தயாரிப்பது, நீர் மோர் மற்றும் பானகம் தயாரித்து அனைவருடனும் பகிர்ந்து உண்டு மகிழ்வார்கள். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வார்கள். இந்த புத்தாண்டு நாளில் புதிய முயற்சிகளை தொடங்குவதும்,புதிய வியாபாரம், புதிய வீடு கட்டதுவங்குவதும் சிறப்பு.
இந்த பராபவ ஆண்டில் அனைவரும் அனைத்து வளங்களும், நலங்களும் பெற்று வாழ தென் தமிழ் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.