கொடுப்பதற்கென்றே பிறப்பெடுத்தவள் நீ!

Su.tha Arivalagan
Jul 24, 2026,03:33 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


கோபுரத்துக்

கலசம் நீ!


கோவில் வாசல் 

படிக்கட்டு நான்! 


பசியாற்றும் 

அன்னபூரணி நீ! 


பசியாறும்

பாமரன் நான்!




அறிவில் சிகரம் தொட்ட 

கலைவாணி நீ! 


அறிவென்றால் என்னவென்றே 

அறியாத பிறவி நான்!


கொடுப்பதற்கென்றே 

பிறப்பெடுத்தவள் நீ! 


உன்னிடம் வாங்குவதற்கென்றே

அவதாரம் எடுத்தவன் நான்! 


திருத்தேரில்  அமர்ந்த 

உற்சவ மூர்த்தி நீ!


தேரை வடம் பிடித்து இழுக்கும் 

சாதாரண பக்தன் நான்! 


அரங்கன் ரங்கநாதன் 

பக்தை ஆண்டாளை 


ஆட்கொண்டது போல் 

அடியேன் பசுபதியை 


ஆட்கொண்ட 

சூரியகலா நீ! 


வரம் கொடுக்கும் வல்லமை 

உனக்கு உண்டு! 


வரம் பெறும் அருகதையே 

எனக்கு உண்டு! 


நம் இருவரையும் 

இணைத்து வைத்த 


இறைவன் 

பெரியவன் தான்!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்).