"கதிரவனாய் இருக்கிறாய் மெழுகுவர்த்தியாய் தியாகம் செய்கிறாய்!"

Su.tha Arivalagan
Sep 04, 2026,03:49 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


பொன் எழிலாய்ப் பூத்தவளோ!

என் நிழல் போல் ஆனவளோ! 

கண் இமை போன்றவளோ 

எனை என்றும் நினைப்பவளோ! 


பணத்தினைப் பார்க்காது 

குணத்தினைப் பார்ப்பாயோ!

அதனால் உன் குணத்திற்கு 

எல்லைதான் இல்லையோ!


கதிரவனாய் இருக்கிறாய்! 

ஆனால் எனக்காக 

மெழுகுவர்த்தியாய்த்

தியாகம் செய்கிறாய்! 




வாழ்வாங்கு வாழ வைக்கிறாய்! 

வசந்தமாய் வருகிறாய்! 

தேனாகப் பதில் மொழிகிறாய்!

தேவதையாய்த் தெரிகிறாய்! 


என் சிந்தனை எல்லாம் 

உன் சிரிப்பொலி தான்!

நான் வந்தனம் சொல்வது 

இறைவனுக்கும் உனக்கும் தான்! 


செந்தமிழ் போன்ற 

இனியவள்தான்! 

சிறப்புக்கு சிறப்பு சேர்க்கும் 

நல்ல மனுஷி தான்! 


பண்பிலே அன்பிலே 

உனக்கு நிகர் நீயே தான்!

இறைவன் வாழ்த்த வேண்டும் 

நாம் நீண்ட காலம் வாழத்தான்! 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)