என் இராமனே!

Su.tha Arivalagan
Jul 18, 2026,03:08 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


ஸ்ரீ ராமன் போல் உன்னிடம் 

வில் ஒன்று இல்லை! ஆனால் 

சொல் ஒன்றும் இல் ஒன்றுமாய்

இருக்கிறாய் என் இராமா!


நீ கிடைத்ததில் 

மனம் 

மகிழ்ச்சி தான் 

இந்த வைதேகிக்கு! 


ஆனால் நீயோ 

நாடாளும் மன்னன் இல்லை! 

நாடாண்ட தந்தைக்கு 

மகனும் இல்லை!




ஆனாலும் 

நீ இருக்கும் இடம் 

எனக்கு அயோத்தி தான் 

என் இராமா!


ஜனகனைப் போன்று 

என் தந்தை உன்னை 

வில் ஒடிக்கச்

சொல்லவில்லை! 


சொல்லியிருந்தால் 

நீ கிடைத்திருப்பாயா 

என்பதும் 

தெரியவில்லை! 


ஆனாலும் என் இராமனே!

நீ எனக்கு வீரனே! 

உன்னை நினைக்கும் போது 

சபரியாய் நானும் 


அவ்வளவு நாள் 

உனக்காக்

காத்திருந்தது

போல் தான் தெரிகிறது! 


எப்போதும் சுந்தரகாண்டமாகவே

இருக்கட்டும் நம் வாழ்க்கை!

ஆரண்ய காண்டம் ஒரு போதும் வேண்டாம்! 


இந்த ஜானகிராமன் 

எனக்கு ராஜா ராமன் தான்! 

இந்த வைதேகி மனம் கவர்ந்த 

மணவாளனே!


உன்னால் 

இராம ராஜ்ஜியம் தான் 

நமது இல்லம் 

இன்றும் என்றும் எப்போதும்!


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)