சித்தனாய்ப் புத்தனாய் இருந்த என்னை!

Su.tha Arivalagan
Aug 19, 2026,11:43 AM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


நல்லவர்கள் 

ஆயிரம் பேர் 

உனக்கு இணை 

ஆக முடியுமா! 


நானிலத்தில்

உன் குணம் போல் 

யாரையேனும் 

பார்க்க முடியுமா!


கண் கண்ட தெய்வம் ஆக 

என் கண் முன்னே நிற்கும் 

அன்னை பூமிக்கு இணை

நீ அல்லவா! 


உன் கார்முகில் நற்குணம் 

உன் பார் புகழ் 

மணாளனுக்குத் தேன் தமிழ்த்

தென்றல் அல்லவா! 




உன் இரு புருவம் 

வடிக்கும் கவி வடிவம் போல் 

எழுதும் கவிஞர்கள் இன்னும் 

தோன்றவில்லை அல்லவா! 


உன் சீர் பெருமை இலக்கணம் 

புரிய வைக்கத்

தொல்காப்பியர் தான் 

மீண்டும் பிறக்க வேண்டுமா!


சித்தனாய்ப்  புத்தனாய்

இருந்த என்னை உன்

பக்தனாய்ப் பித்தனாய்

மாற்றியவள் நீயல்லவா!


நீ படிக்கும் 

கீதம் எல்லாம்

நான் படிக்கும்  

வேதம் அல்லவா! 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)