சுற்றி வளைக்கும் என தெரிந்தும் .. பற்றிக் கொண்டிருக்கிறாய்
Mar 18, 2026,02:49 PM IST
பற்று...!
- பா.பானுமதி
சுற்றி வளைக்கும் என தெரிந்தும்
பற்றி கொண்டிருக்கிறாய்
அழுத்தத்திற்கு ஆளாகும் என அறிந்தும்
அதிலே அமிழ்ந்து போகிறாய்
நிரந்தரம் இல்லை என தெரிந்தும்
நித்தமும் தேடுகிறாய்
கடினம் என்று கண்ட பின்பும்
அதற்குள்ளே கரைகிறாய்
இரைச்சல் என அறிந்த பின்பும்
இசையாக்க முயல்கிறாய்
காலை இழுக்கும் என்று தெரிந்தாலும்
கவலைப்படாமல் கால் வைக்கிறாய்
கை கடிக்கும் எனப் புரிந்தும்
கலங்கிடாமல் கை கொடுக்கிறாய்
விதியின் விரல்கள் விரல்மிட்டு அழைத்தால்
விளங்காமல் பிடித்துக் கொள்கிறாய்
கண்ணீரை தந்தாலும் கரைந்திடாமல்
பன்னீர் தெளிக்கிறாய்
பற்றுகள் பலம் மிக்கது!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)