மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டின் புதிய திசையை தீர்மானிக்கும்- பிரதமர் மோடி பெருமிதம்

Su.tha Arivalagan
Apr 16, 2026,05:17 PM IST

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இன்று ஒரு மிக முக்கியமான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அவர், இந்தியாவை வளர்ந்த தேசமாக மாற்றுவதில் பெண்களின் பங்களிப்பு தவிர்க்க முடியாதது என்று வலியுறுத்தினார்.


நாட்டின் புதிய திசை :


பிரதமர் தனது உரையில், "நாம் அனைவரும் இணைந்து இந்தியாவிற்கு ஒரு புதிய திசையைக் காட்டப் போகிறோம். நமது நாடு செல்லும் திசையை நிர்ணயிக்கும் அளவுக்கு மகளிர் இடஒதுக்கீடு மசோதா முக்கியத்துவம் வாய்ந்தது. 'வளர்ச்சி அடைந்த பாரதம்' என்ற உன்னத நோக்கத்துடன் மகளிர் இடஒதுக்கீட்டை நாம் இணைக்கிறோம்," என்று குறிப்பிட்டார். இது வெறும் சட்டம் மட்டுமல்ல, 21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் வளர்ச்சியை உறுதி செய்யும் ஒரு அடித்தளம் என்றும் அவர் தெரிவித்தார்.


எதிர்க்கட்சிகளுக்கு கடும் எச்சரிக்கை :




மசோதாவை அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கும் கட்சிகளை பிரதமர் கடுமையாகச் சாடினார். அவர் பேசுகையில், "மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எதிர்ப்பவர்களை தேர்தல்களில் நாட்டின் பெண்கள் மன்னிக்க மாட்டார்கள். அவர்கள் அதற்கான விளைவுகளைச் சந்திப்பார்கள்." "தனிப்பட்ட முறையில் இந்த மசோதாவை ஆதரிப்பவர்கள் கூட, பொதுவெளியில் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கின்றனர். மகளிர் இடஒதுக்கீட்டிற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்," என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.


30 கால அனுபவம் மற்றும் அமலாக்கம் :


இந்த மசோதாவை அமல்படுத்துவதற்கான சரியான காலம் இதுவே என்று குறிப்பிட்ட பிரதமர், கடந்த 30 ஆண்டுகளில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு வழங்கப்பட்ட பிரதிநிதித்துவம் காரணமாக, தற்போது பெண்களுக்குச் சிறந்த அரசியல் அனுபவம் கிடைத்துள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இது நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் அவர்கள் திறம்படச் செயல்பட உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


"மகளிர் இடஒதுக்கீடு என்பது ஒரு கட்சிக்குச் சாதகமானது அல்ல, இது நாட்டின் ஜனநாயகத்திற்குச் சாதகமானது," என்று குறிப்பிட்ட பிரதமர், தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மூலம் 50 சதவீத மக்கள் தொகையான பெண்களை நாட்டின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் பங்கேற்கச் செய்வதே அரசின் இலக்கு என்று கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.