தொகுதி மறுவரையறை மசோதா மீது இன்று வாக்கெடுப்பு...நாளை விவாதம்

Apr 16, 2026,05:17 PM IST

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் சிறப்புக்கூட்டத் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 16, 2026) நாட்டின் எதிர்கால அரசியலில் மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.


பரபரப்பான விவாதம் மற்றும் வாக்குப்பதிவு :


மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற இன்றைய அமர்வில், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட 3 முக்கிய மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இந்த மசோதாக்கள் மீது சுமார் 15 முதல் 18 மணி நேரம் விரிவான விவாதம் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார்.


தொகுதி மறுவரையறை தொடர்பான 131-வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை அறிமுகம் செய்வதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. குறிப்பாக, திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்தன. மின்னணு முறையிலான வாக்குப்பதிவில் ஏற்பட்ட சில குழப்பங்கள் காரணமாக, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று வாக்குச்சீட்டு (Ballot Paper) மூலம் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் அனுமதி அளித்தார்.


மசோதா அறிமுகம் - வாக்கு விபரங்கள் :




நீண்ட இழுபறிக்குப் பிறகு நடைபெற்ற வாக்கெடுப்பில் பதிவான ஓட்டு விபரம், 


ஆதரவு வாக்குகள்: 207

எதிர்ப்பு வாக்குகள்: 126

மொத்தம் பதிவான வாக்குகள்: 333

பெரும்பான்மை ஆதரவுடன் இந்த மசோதா வெற்றிகரமாக மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.


சட்டச் சிக்கலும் அரசியல் பலமும் :


இது ஒரு அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா என்பதால், இதனை நிறைவேற்ற அவையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாகும். தற்போது நிலவரப்படி:


மக்களவையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (NDA) 293 உறுப்பினர்கள் உள்ளனர்.

எதிர்க்கட்சிகள் தரப்பில் 234 உறுப்பினர்கள் உள்ளனர்.

எனவே, மசோதாவை இறுதி கட்டமாக நிறைவேற்றுவதில் இரு தரப்பிற்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.


முக்கிய அறிவிப்பு :

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த 3 மசோதாக்கள் மீதான இறுதி வாக்கெடுப்பு நாளை (ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெறும். தொகுதி மறுவரையறையுடன் சேர்த்து மகளிர் இடஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்களும் இந்த விவாதத்தில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், வரும் காலங்களில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எல்லைகளில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்பதால் ஒட்டுமொத்த இந்திய அரசியலும் தற்போது நாடாளுமன்றத்தை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்