இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது: ராமதாஸ்

Meenakshi
Dec 12, 2025,05:18 PM IST

சென்னை: இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது. அதை சரியாக பகிர்ந்து வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பாமக போராட்டம் நடத்தி வருகிறது.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த போராட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பங்கேற்றார். அப்போது ராமதாஸ் பேசுகையில், 


தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பாமக அறப்போராட்டத்தை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக கோட்டைக்குச் சென்று ஆளும் கட்சியினரிடம் பேசி சாதிவாரிக் கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தேன். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். இன்னும் சொல்லப்போனால் அவர்களுக்கு வகுப்பு எடுத்தேன். இட ஒதுக்கீட்டால் தமிழக மக்கள் வளர்ச்சியடைந்தால் அது ஆளும் கட்சிக்குத்தானே பெருமை. 




சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த எது தடுக்கிறது. அதில் இந்த அரசுக்கு என்ன சிக்கல் இருக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பில் ஒருசிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் சமூகநீதியைக் காக்க இதைத் தவிர வேறுவழியில்லை. இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது. வன்னியர்கள் மட்டுமல்ல அனைத்து சமுதாயங்களும் வளர வேண்டும். ஒவ்வொரு சமுதாயத்திலும் எவ்வளவு மக்கள் இருக்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது எளிதுதான்


324 சமுதாய மக்களும் வாழவேண்டும், அவர்களின் பிள்ளைகள் படிக்க வேண்டும். முன்னேற வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். வன்னியர்கள் மட்டும் தான் வாழவேண்டும் என எந்த மடையனும் சொல்ல மாட்டான். 324 சமூகங்களுக்காக என்னை தவிர வேறு யாராவது போராட்டம் செய்து உள்ளார்களா எனத் தெரிவித்துள்ளார்.