புதிய முகவரிக்கு மாறிய பிரதமர் அலுவலகம்...இனி 'நார்த் பிளாக்' 'சவுத் பிளாக்'என்னவாகும்?

Su.tha Arivalagan
Feb 14, 2026,12:12 PM IST

புது டெல்லி: தசாப்தங்களாக இந்தியாவின் நிர்வாக அதிகாரத்தின் மையப்புள்ளிகளாகத் திகழ்ந்த நார்த் பிளாக் (North Block) மற்றும் சவுத் பிளாக் (South Block) கட்டடங்களின் சகாப்தம் ஒரு மாற்றத்தைச் சந்தித்துள்ளது. பிப்ரவரி 13, 2026 அன்று, பிரதமர் அலுவலகம் (PMO) தனது புதிய முகவரியான 'சேவா தீர்த்' (Seva Teerth) வளாகத்திற்கு மாற்றப்பட்டது.


1931-ஆம் ஆண்டு புது டெல்லி இந்தியாவின் தலைநகராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதன் 95-வது ஆண்டு தினத்தை முன்னிட்டு இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை 'சேவா தீர்த்' வளாகத்தைத் திறந்து வைத்தார். இந்த வளாகத்தில் பிரதமர் அலுவலகம் மட்டுமின்றி, தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் மற்றும் அமைச்சரவை செயலகம் ஆகியவையும் இயங்கும்.


திறப்பு விழாவின் போது, பிரதமர் மோடி அங்குள்ள விநாயகர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் நலனுக்கான முக்கிய முடிவுகளை அங்கிருந்து எடுத்தார். "வளர்ச்சியடைந்த இந்தியா" (Viksit Bharat) நோக்கிய பயணத்தில் இந்த புதிய கட்டடங்கள் ஒரு மைல்கல் என்று அவர் குறிப்பிட்டார்.


நார்த் மற்றும் சவுத் பிளாக் என்ன ஆகும் ?




1921-ஆம் ஆண்டு முதல் நாட்டின் அதிகார மையமாக விளங்கிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்கள் இனி என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான பதிலை அரசு அறிவித்துள்ளது. இந்த இரண்டு பிரம்மாண்ட கட்டடங்களும் 'யுகே யுகீன் பாரத தேசிய அருங்காட்சியகம்' (Yuge Yugeen Bharat National Museum) என்ற பெயரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகமாக மாற்றப்பட உள்ளன.


இந்தியாவின் நாகரிகப் பயணத்தை விளக்கும் வகையில் இது அமையும். கலாச்சார அமைச்சகத்தின் கீழ் உள்ள 6 அருங்காட்சியகங்கள், 52 இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ASI) அருங்காட்சியகங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட்ட கலைப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்படும். மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இது குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்கையில். இந்தத் திட்டம் தற்போது வடிவமைக்கும் நிலையில் உள்ளதாகவும், இதற்கான பட்ஜெட் மற்றும் காலக்கெடு விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.


நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் ஆளுகையில் காலனித்துவ அடையாளங்களை நீக்கும் (Decolonise) அரசின் ஒரு பகுதியாக இந்த இடமாற்றம் பார்க்கப்படுகிறது. முன்னதாக, உள்துறை அமைச்சகமும் நார்த் பிளாக்கிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.