பொங்கல் சீர் வரிசை!
- தி. மீரா
பொங்கல் வரும் முன்னிரவு… மீனாட்சி அம்மாவின் வீடு முழுக்க மஞ்சள் மணம். அடுப்பருகே மண் பானைகள்,
முற்றத்தில் காய்ந்த கரும்புகள், மடியில் வைத்துக் கட்டிய பச்சரிசி மூட்டைகள். எல்லாமே மகள் வீட்டுக்கான சீர்.
மீனாட்சி அம்மாவுக்கு கலைவாணி ஒரே மகள். திருமணம் செய்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும், “பொங்கலுக்கு சீர் அனுப்பணும்” என்ற எண்ணம் வந்தாலே அவள் மனம் துடித்துவிடும்.
ஒவ்வொரு பொருளையும் எடுக்கும் போதும் அவளுக்கு மகளின் சிறு வயது நினைவுகள் வந்தன. “இந்த மண் பானை…
நீ பொங்கல் அடிக்க கற்றுக்கொண்ட நாளை நினைவுபடுத்துது.” “இந்த சேலை… முதல் பொங்கலில் நீ கட்டணும்னு ஆசை.” அருகில் நின்ற கணவன் சொன்னார், “எல்லாம் வாங்கிட்டோம் தானே, இன்னும் என்ன?” மீனாட்சி அம்மா மெதுவாக சொன்னாள், “இன்னும் என் மனசு போகலையே…”
அடுத்த நாள் காலை, உறவினர்கள் சீர் தூக்கிக் கொண்டு மகள் வீட்டை நோக்கி சென்றார்கள். வாசலில் கலைவாணி நின்றிருந்தாள். கண்களில் ஒளி, ஆனால் அதற்குள் மறைந்திருந்த ஏக்கம் அம்மாவின் கண்களுக்கு மட்டும் தெரிந்தது. “அம்மா…” அந்த ஒரு சொல்லில் மீனாட்சி அம்மாவின் இதயம் கரைந்தது. மகளை அணைத்துக் கொண்டபோது “நல்லா இருக்கியா?” என்ற கேள்வியில் ஆயிரம் அர்த்தங்கள் ஒளிந்திருந்தன.
சீர் வரிசை வரிசையாக வைக்கப்பட்டது. மண் பானை, அரிசி, வெல்லம், கரும்பு, மஞ்சள், சேலை— ஒவ்வொன்றையும் மகள் தொட்டுப் பார்த்தாள். அவளின் விரல்கள் நடுங்கின. “என்னம்மா, அழறே?” என்று அம்மா கேட்டாள். கலைவாணி மெதுவாக சொன்னாள், “இங்க எல்லாம் இருக்குது அம்மா… ஆனா நீங்க இல்லாம பொங்கல் தான் கஷ்டம்.”
அம்மாவின் கண்களில் கண்ணீர் பொங்கியது. அவள் மகளின் தலையை தடவி சொன்னாள், “சீர் வரிசை பொருளுக்காக இல்லம்மா… நீ தனியா இல்லன்னு சொல்லத்தான்.” அம்மா கொமண்டு வந்த மண் பானையில்
அரிசி பொங்கியபோது, அதில் கலந்தது தாய் மனமும், மகள் ஏக்கமும். அன்று கலைவாணி உணர்ந்தாள் பொங்கல் சீர் வரிசை என்பது வெல்லம், அரிசி, சேலை அல்ல; தாய் மனம் மகள் வீட்டிற்கு நடந்து வரும் பாதை. உலகம் எவ்வளவு மாறினாலும், பொங்கல் சீர் வரிசை தாய்–மகள் உறவின் அழியாத மொழியாகவே இருக்கும்.
(பாவலர் முனைவர் தி.மீரா, எழுத்தாளர், கவிஞர், கட்டுரையாளர். ஈரோட்டைச் சேர்ந்தவர்)