தை பிறந்தால் வழி பிறக்கும்... கூட்டணியில் இன்னும் நிறைய மாற்றங்கள் வரவுள்ளன: பிரேமலதா விஜயகாந்த்

Meenakshi
Jan 05, 2026,08:37 PM IST

சென்னை: தை பிறந்தால் வழி பிறக்கும். வருகின்ற தேர்தல், தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது நடக்கும் ஒரு தேர்தலாக இருக்கும். கூட்டணியில் இன்னும் நிறைய மாற்றங்கள் வரவுள்ளன என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, தேமுதிகவின் பலத்தை நிரூபிக்கவும், அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்கவும் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில்  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டத்திற்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். மாநில நிர்வாகிகள் எல்.கே.சுதீஷ், இளங்கோவன், பார்த்தசாரதி உள்பட மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.




இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், தை பிறந்தால் வழி பிறக்கும். வருகின்ற தேர்தல், தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நல்லது நடக்கும் ஒரு தேர்தலாக இருக்கும். தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். பொங்கலுக்கு பின்னர் கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கும். இந்த நிமிடம் வரை எந்த கட்சியும் இறுதிக் கூட்டணி இதுதான் என அறிவிக்கவில்லை. கூட்டணியில் இருப்பவர்கள் வெளியேறலாம். புதியவர்கள் கூட்டணியில் சேரலாம். கூட்டணியில் இன்னும் நிறைய மாற்றங்கள் வரவுள்ளன.


2026 தேர்தலில் யாருடன் கூட்டணி என மாவட்டச் செயலாளர்கள் தங்களின் கருத்துகளை எழுதி பெட்டியில் போட்டுள்ளனர். அவற்றை தனிப்பட்ட முறையில் நான் பிரித்து படிக்க இருக்கிறேன். அவர்களின் கருத்து அந்தந்த மாவட்ட மக்களின் கருத்து. அதன்படியே கூட்டணி குறித்து முடிவு செய்து வரும் 9 ஆம் தேதி கடலூர் மாநாட்டில் அறிவிப்பேன். தொண்டர்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம். தேமுதிகவுடன் கூட்டணி வைக்க அனைத்துக் கட்சிகளும் விரும்புகின்றன. முழுக்க முழுக்க தொண்டர்களின் விருப்பப்படியே கூட்டணி இருக்கும் என்று தெரிவித்தார்.