புரட்சிப் புயலாய் எழுந்திடு பெண்ணே!

Su.tha Arivalagan
Mar 06, 2026,02:41 PM IST

- இரா. மும்தாஜ் பேகம்


பொந்துக்குள் நண்டாகப்

புதைந்து இருந்தாய்.

பொறுமைக்கு கடலாக வாழ்ந்து இருந்தாய்.

ஆழிக்குள் முத்தென அமிழ்ந்து இருந்தாய்.

ஆமை போல் உனக்குள் அடங்கி இருந்தாய்.


அடுக்களை வாழ்வில் மூழ்கி கிடந்தாய்.

அடிமை த்தனத்தில் வாடிக் கிடந்தாய்.

சிறைக்குள் கிளியாய் சிக்கிக் கிடந்தாய்.

சிமினிக்குள் ஒளியாய் மறைந்து கிடந்தாய்.




ஆழிக்குள் மூழ்கிய ஆதவன் வான் 

அரியணை ஏறி வருவதை போல

புரட்சிப் புயலாய் புறப்படு பெண்ணே

புது உலகம் படைக்க

உருவடு பெண்ணே..


அடிக்கும் கோளுக்கு அஞ்சாத அரவமாய். வெடிக்கும் புரட்சியில் வீறு கொண்ட ஜான்சியும்.

இந்தியாவை காத்திட ஈரெட்டு குண்டுகளை இதயத்தில் தாங்கிய இந்திரா தாயும்.

 வெள்ளையனை எதிர்த்த வெந்தனல் வேலுநாச்சியும்

விண்வெளி ஆய்வில்

வெற்றி கண்ட

கல்பனா சாவ்லாவும்.

உஹது போருக்கு உவந்தே சென்ற

உத்தம நபி  மனைவி ஆயிஷாவும்.


சாதித்த பெண்களின்

சாதனைகள்எல்லாம். சரித்திரம் காட்டும் கோடானு கோடி

பூக்கள் எல்லாம் புதுமையை படைத்திட

பெண் வாசம் வீசிடும் பூமி.


(இரா.மும்தாஜ் பேகம், திருச்சி, தமிழ்நாடு)