சஞ்சு சாம்சன் போவாருன்னு பார்த்தா.. ராகுல் டிராவிட் ராஜிநாமா.. என்ன நடக்குது?

Su.tha Arivalagan
Aug 30, 2025,04:30 PM IST

டெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் அந்த அணியை விட்டு விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருவார் என்று பேச்சு அடிபடும் நிலையில் தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக ராகுல் டிராவிட் அறிவித்துள்ளார்.


முதல் IPL சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, IPL 2025 இன் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்த நிலையில், ராகுல் டிராவிட்டின் இந்த முடிவு முக்கியத்துவம் வாய்ந்தது. சாம்சன் அணியை விட்டு வெளியேற விரும்புவதாக செய்திகள் உலா வருகின்றன. அவரை அணிக்குள் கொண்டு வர சென்னை சூப்பர் கிங்ஸ் போன்ற அணிகள் விரும்புகின்றன. இந்த நிலையில் திடீரென ராகுல் டிராவிட் ஏன் விலகினார் என்ற குழப்பம் எழுந்துள்ளது. 




ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் 2011ம் ஆண்டு ராகுல் டிராவிட் வீரராக இணைந்து 3 சீசன்கள் விளையாடினார். பின்னர் 2013 முதல் அவர் பயிற்சியாளராக மாறினார். 2 சீசன்கள் பயிற்சியாளராக நீடித்தார். 2015 முதல் 2024 வரை பிசிசிஐயின் ஒப்பந்தத்திற்குப் போனதால் அவர் ஐபிஎல் பக்கம் வரவில்லை. இடையில் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் டிராவிட் இருந்தார். 2024ல்  டி20 உலகக் கோப்பையை வென்ற கையோடு அவர் பயிற்சியாளர் பதவியிலிருந்து விடை பெற்றார்.


அதன் பின்னர் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் தலைமைப் பயிற்சியாளராக இணைந்தார். இருப்பினும் 2025 சீசன் மட்டுமே அவர் பயிற்சியாளராக நீடித்தார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே ஜெயித்து புள்ளிகள் பட்டியலில் 9வது இடத்தைப் பிடித்து வெளியேறியது என்பது நினைவிருக்கலாம்.