கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
சென்னை: கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை இருக்கு. அதுகுறித்த திட்டமும் இருக்கு. ஆனால் இன்னும் எதுவும் முடிவாகவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
கமல்ஹாசனும், ரஜினிகாந்த்தும் இணைந்து நடித்து பற்பல ஆண்டுகளாகி விட்டன. கே.பாலச்சந்தர் பட்டறையைச் சேர்ந்த இருவரும் இணைந்து நடித்த அத்தனை படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகும். ஆனால் இருவரும் இணைந்து நடிப்பதில்லை என்ற முடிவை எடுத்து பிரிந்து வந்து அதை விட மிகப் பெரிய பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்தனர். தொடர்ந்து களத்தில் கலக்கியும் வருகின்றனர்.
இந்த நிலையில் இருவரையும் மீண்டும் இணைந்து நடிக்க வைக்க பலரும் முயற்சித்து வருகின்றனர். ஆனால் இதுவரை அது கை கூடவில்லை. இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இருவரையும் இணைக்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கமல்ஹாசனின் மிகத் தீவிரமான ரசிகர்தான் லோகேஷ். கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற பிளாக்பஸ்டரைக் கொடுத்தார். தொடர்ந்து ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தைக் கொடுத்தார் லோகேஷ் கனகராஜ். அடுத்து அவர் கமல்ஹாசனையும், ரஜினிகாந்த்தையும் இணைத்து இயக்கப் போவதாக பரபரப்பு கிளம்பியது.
இதுகுறித்து துபாயில் நடந்த சைமா பட விழாவில் கமல்ஹாசனிடமே கேட்கப்பட்டது. அதற்கு அவர் அந்த செய்தியை மறுக்கவில்லை. மாறாக இருவரும் இணைந்து நடிப்பதை ரசிகர்கள் வரவேற்றால் சந்தோஷம்தான் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த்தும் அதை உறுதிப்படுத்தியுள்ளார்.
கோவை செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்தார் ரஜினிகாந்த். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கப் போவதாக செய்திகள் வருகின்றதே என்று கேட்டனர். அதற்கு ரஜினிகாந்த், (கமல்ஹாசனின்) ராஜ்கமல் - ரெட்ஜெயன்ட் தயாரிப்பில் நடிக்கப் போறேன். கமலுடன் இணைந்து நடிக்க ஆசை. ஆனால் இன்னும் இயக்குநர் பிக்ஸ் ஆகவில்லை. இருவரும் இணைந்து நடிக்க ஆசை உள்ளது. ஆனால் கதை, கதாபாத்திரம் அமைய வேண்டும். பிளான் இருக்கு. மற்றவை பிக்ஸ் ஆகவில்லை என்றார் ரஜினிகாந்த்.
இதன் மூலம் இருவரையும் இணைக்கும் முயற்சிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருப்பதாக உணரப்படுகிறது. இயக்குநர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.