நான் பேசினாலே பிரச்சனை ஆகுது - தர்மன் பட விழாவில் ரஜினிகாந்த் பேச்சு
சென்னை: நடிகர் ரஜினிகாந்த், 'தர்மன்' திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மேடையில் மிகவும் உணர்வுப்பூர்வமாகவும், அதே சமயம் வெளிப்படையாகவும் பேசியுள்ளார்.
பேசினாலும் பிரச்சனை.. பேசாவிட்டாலும் கிண்டல்!
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் தலைவர் 173 படத்திற்கு தர்மன் என டைட்டில் வைத்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக் வெளியீட்டு விழா இன்று (ஜூன் 24) நடைபெற்றது. இதில் ரஜினி, கமல் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அப்போது விழாவில் பேசிய ரஜினி, பல விஷயங்களை ஓப்பனாக பேசி உள்ளார். விழாவில் பேசிய ரஜினிகாந்த், தற்காலத்தில் தான் பொது மேடைகளில் பேசுவதற்கு எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது:
"இப்போது என்னை எதாவது ஒரு மேடையில் பேச அழைத்தாலே எனக்குள் ஒரு தயக்கம் ஏற்படுகிறது. ஏனென்றால், நான் பேசினாலே அது பிரச்சனையாகி விடுகிறது. அந்தப் பிரச்சனை எனக்கு மட்டும் வருவதில்லை, என்னைச் சார்ந்த மற்றவர்களுக்கும் அது பிரச்சனையாக மாறிவிடுகிறது. சரி, இதற்கெல்லாம் பயந்து நான் பேசாமல் அமைதியாக இருந்தால், அதற்கும் சும்மா இருக்க மாட்டார்கள், கிண்டல் செய்கின்றனர்."
மேலும் தொடர்ந்த அவர், "நான் அமைதியாக இருந்தால், 'வாயில் கொழுக்கட்டையா இருக்கு, பேசினால் என்ன?' என்று கேட்கிறார்கள். ஒருவேளை நான் ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசினால், 'இப்போது பேசுவதை முன்னாடியே பேச மாட்டியா?' எனத் திட்டுகிறார்கள். இதனால் என்ன செய்வதென்றே தெரிவதில்லை" என்று நகைச்சுவை கலந்த ஆதங்கத்துடன் குறிப்பிட்டார்.
"லேட்டா தான் புரிஞ்சுகிட்டேன்" :
தன்னைச் சுற்றி வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, தனது வாழ்நாளில் கற்றுக்கொண்ட ஒரு முக்கியமான உண்மையை ரஜினிகாந்த் இவ்விழாவில் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், "நம்மைப் பிடிக்காதவர்களுக்கு நாம் என்ன செய்தாலும் பிடிக்காது. அதேபோல், நம்மைப் பிடித்தவர்களுக்கு நாம் என்ன பண்ணினாலும் பிடிக்கும் என்று நினைப்பதும் முட்டாள்தனம். இந்த விஷயத்தை நான் ரொம்ப நாள் கழித்து, லேட்டாகத் தான் புரிந்துகொண்டேன்! எனவே, எப்போதும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்." என தெரிவித்தார்.
கமலை புகழ்ந்த ரஜினி :
இளமை ஊஞ்சலாடுகிறது படத்திற்காக என்னை சிபாரிசு செய்ததே கமல் தான். ஆரம்ப காலத்தில் அவர் செய்த உதவியை என்னால் மறக்க முடியாது. அப்போது சீன்களில் ஏதாவது வித்தியாசமாக நான் செய்கிறேன் என்றால் பலர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஆனால் கமல் தான் எனக்காக பேசி, அதை ஓகே வாங்குவார். அவர் செய்த அந்த உதவிகள் தான் என்னை இந்த அளவிற்கு வளர்ச்சி பெற செய்தது என கமலை பாராட்டினார் ரஜினி.