ஓங்குகிறதா எடப்பாடி பழனிசாமியின் கை? .. அடுத்தடுத்து வீட்டிற்கு படையெடுக்கும் எம்.எல்.ஏ-க்கள்

Su.tha Arivalagan
May 25, 2026,05:01 PM IST

சென்னை: அதிமுக உட்கட்சி விவகாரங்களில் மீண்டும் ஒரு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்குகிறதா என்ற கேள்வியை எழுப்பும் வகையில், சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு முக்கிய நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து வருகை தந்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். 


எடப்பாடி இல்லத்தில் குவியும் ஆதரவாளர்கள் :


சென்னையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்திற்கு முக்கிய நிர்வாகியான வேலுமணி தரப்பைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் அடுத்தடுத்து வருகை தந்து கொண்டிருக்கின்றனர். 


குறிப்பாக, ஆற்காடு சுகுமார், சங்கரன்கோவில் திலீபன் ஜெய்சங்கரன், அந்தியூர் ஹரிபாஸ்கர் உள்ளிட்ட எஸ்பி வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 5 பேர் இன்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்.  


கொங்கு மண்டலம் மற்றும் வட மாவட்டங்களைச் சேர்ந்த இந்த முக்கிய நிர்வாகிகளின் தொடர் வருகை, எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக கட்சிக்குள் புதிய அலை வீசுவதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.


சண்முகம் தரப்பில் திடீர் மாற்றம்?




இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், மற்றொரு முக்கிய திருப்பமாக சி.வி.சண்முகத்தின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட பண்ருட்டி எம்.எல்.ஏ பண்ருட்டி மோகன், கட்சியின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். மாவட்ட வாரியாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் மற்றும் முரண்பாடுகளுக்கு மத்தியில், இந்த சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. 


சி.வி.சண்முகம் தரப்பில் இருந்த நிர்வாகிகள் தற்போது தலைமைக்கு ஆதரவாகத் தங்களது நகர்வுகளை மாற்றத் தொடங்கியுள்ளார்களா என்ற விவாதத்தையும் இது கிளப்பியுள்ளது.


வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் ஆகிய இரு துருவங்களின் ஆதரவாளர்களும் தற்போது தலைமை நோக்கி நகரத் தொடங்கியிருப்பது, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பிடியை அதிமுக-வில் மேலும் பலப்படுத்தியுள்ளது என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. 


மற்றொரு புறம் எடப்பாடி பழனிச்சாமி முகாமிற்கு திரும்ப முடியாத 3 பேர் தங்களின் எம்எல்ஏ., பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, தமிழக வெற்றிக் கழகத்தில் சென்று இணைந்துள்ளனர். இதனால் எஸ்.பி.வேலுமணி அணியில் இருக்கும் மீதமுள்ளவர்கள் என்ன முடிவு எடுக்க போகிறார்கள்? எந்த பக்கம் செல்ல போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்துள்ளது. 


அதிமுக.,வில் தொடரும் பரபரப்பு :


சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுக.,வில் தொடர்ந்து குழப்பங்கள் நீடித்து வருகிறது. எதிர்பாராத மாற்றங்களும் நிகழ்ந்து வருகிறது. அதிமுக தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக எஸ்.பி.வேலுமணியுடன் சென்ற 25 எம்எல்ஏ.,க்களில் 3 பேர் இன்று தங்களின் எம்எல்ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெக பக்கம் சென்று விட்டனர். 5 பேர் எடப்பாடி பழனிச்சாமியை சென்று சந்தித்துள்ளனர். 


இது அதிமுக.,வில் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினாலும், அதிமுக மேலும் பிளவுப்பட்டு, பலவீனமடைந்து வருவதையே காட்டுகிறது. இதனால் அதிமுக.,வில் அடுத்து என்ன நடக்கும் என அனைவரும் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.