ரசிப்பேனென சொன்னால்!
Aug 26, 2026,11:26 AM IST
- மொழிப்பித்தன் இரா ச குமார்
ரசிக்க நானிருக்கிறேன்
நீயெழுதென
சொல்பவரா நீங்கள்
உங்களுக்கே உங்களுக்காக
நானுமெழுதுவேன்
நாளுமொரு கவிதை...
உங்களிடமொரு கோரிக்கை
எழுதுகோலின் விருப்பத்துக்கு
விட முடியுமா?..
இதையெழுது
அதையும் சேர்த்தெழுதெனும்
கட்டாயப்படுத்தலை
தவிர்க்கவும்
கூடவும் கூடாது
காரணம்
இந்த
எழுதுகோலிருக்கிறதே
எழுது கோல்
எழுத மறுக்கும்
ஏடாகூடமாய் கோபப்படும்...
தானே
சிலப்பதிகாரமெழுதியதாய்
நினைப்பு
திமிர்
அகம்பாவம் ஆணவம்
கண்டதை கிறுக்கி கவிதையென சொல்லும் இந்த
எழுதுகோலுக்கு...
சுருக்கமாய் சொன்னால்
என் எழுதுகோலுக்கு
கொஞ்சம்
நானே
நான் மட்டுமே
எனுமொரு மமதை...
காட்டிக்கொள்ளாது
பவ்யமாய்
இருக்கும்
அத்தனையும் நடிப்பென அறிக...
ஒருவேளை
அன்பொழுக கேட்டுக்கொண்டால்
நிறைய நிறைய
கொள்ளவு தாண்டியும்
தனக்குள்
வழிய வழிய
மை
நிரப்பி
ஆரவரித்து
கும்மாளமிட்டு
எழுதும்
எழுதுமிந்த எழுதுகோல் ...!