அரசியல் பொதுக்கூட்ட விதிமுறைகள்.. நவ., 6ல் அனைத்துக் கட்சி கூட்டம்: தமிழ்நாடு அரசு!
சென்னை: தமிழ்நாட்டில் பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள் நடத்த வழிகாட்டு நெறிமுணைகள் வகுப்பதற்கான அனைத்து கட்சி கூட்டம் நவம்பர் 6ம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விஜய் கடந்த செப்டம்பர் 27ம் தேதி கரூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 110க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோக்களுக்கு காவல் துறை அனுமதி வழங்க மறுத்து வந்தது. அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அரசியல் கட்சித் தலைவர்களின், ரோடு ஷோ மற்றும் பொதுக் கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கும் போது, பின்பற்ற வேண்டிய வழிகாட்டு விதிமுறைகளை, 10 நாட்களுக்குள் வகுக்க வேண்டும் என தெரிவித்திருந்தது.
இதனையடுத்து, கரூரில் நடந்தது போன்ற துயரம் இனி நடக்காமல் இருக்க வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோக்களின் போது கூட்டங்களை கட்டுப்படுத்துவற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது தொடர்பாக வரும் நவம்பர் 6ம் தேதி கூட்டம் நடைபெறும் என்றும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
தலைமை செயலகத்தில் காலை 10.30 மணிக்கு நடக்கும் இந்தக் கூட்டத்திற்கு, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நவம்பர் 6ம் தேதி மூத்த அமைச்சர்கள் தலைமையில் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.