தென்றலே... என் தொலைந்து போன நிழலே!

Su.tha Arivalagan
Jan 28, 2026,12:43 PM IST
- ச. அகல்யா

உன் பெயரை உச்சரிக்கும் போதே, 
உலர்ந்து போன நாவிற்குள் ஒரு துளி தேன்... 
உள்ளுக்குள் ஒரு மெல்லிய அமைதி! 
அதனிலும் பேரழகு... 
பெண்மையின் மென்மைக்கு உன் பெயரைச் சூட்டி, 
அவர்கள் நடக்கும் போதெல்லாம் 
நீயே வருவது போல் மனம் மயங்கி அழகு பார்ப்பது!

"தென்றலைக் கண்டு மாலையிட ஆசை" 
சின்னச் சின்ன ஆசையாய் அன்று கேட்டது... 
இன்று தீராத பெருமூச்சாய் ஆசையாக மட்டுமே எஞ்சி நிற்கிறது!





என்னையே நான் அறியாத மழலைப் பருவத்தில், 
என்னைத் தாலாட்டி வளர்த்த தாய் நீ! 
சுவாசத்தில் சுகந்திரத்தையும், 
சூழலில் ஆரோக்கியத்தையும் விதைத்த உன்னை, 
இன்று தேடி அலைகிறேன்... 
காணக் கிடைக்காத பொக்கிஷமாய் மறைந்து போனாய்!

உன் சொந்த வீடான இந்த மண்ணிற்குள், 
யாரோ அந்நியனைப் போல 
விருந்தாளியாய் வந்து தலைகாட்டிச் செல்கிறாயே... 
இது நியாயமா?

குளிர்ச்சியைக் கொடுக்க வேண்டிய நீ, 
சுவாசிக்கக் கூடத் தகுதியற்ற நச்சுக் காற்றாய் மாறிப் போனாய்! 
"தென்றல்" என்ற பெயரில் இன்று எஞ்சி இருப்பதோ... 
வெற்றுப் பெயரும், நாம் கலந்த விஷமும் மட்டுமே!

மீண்டும் வருவாயா?
என் ஜன்னல் கம்பிகள் வழியே அல்ல...
என் நுரையீரலின் ஆழம் வரை நிஜமான தென்றலாக!

(ச.அகல்யா , பி.காம், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், வயலை)