Srirpiya Short Story: நிழலும் நிலவுமாய்..!
- ச. ஸ்ரீபிரியா
ஐந்து பெண்களுக்கு நடுவே பிறந்த ஒரே சிங்கம் என் அண்ணன். அப்பா வெளியூரில் ஆசிரியராகப் பணிபுரிந்து தேவைகளை நிறைவேற்ற மூழ்கியிருந்தபோது, வீட்டுக்குள் எங்கள் நிழலாக நடந்தவர் அவரே.
அம்மா, அப்பா, சகோதரிகளுக்கு நடுவே பம்பரம்போல் சுழன்று பயணித்தவர் பள்ளிக்கு அழைத்துச் செல்வது, மருத்துவத் தேவையில் துணைநிற்பது, சிறு வேண்டுதல்களை முன்கூட்டித் தீர்ப்பது எல்லாம் அவரின் வழக்கம். அப்பா பேருந்தை தவறவிட்டால் இருசக்கர வாகனத்தில் விரட்டிச் சென்று ஏற்றிவிடும் அண்ணனின் முதுகு சகோதரிகளுக்கு இன்னொரு தந்தையின் பிம்பம்.
அம்மா மறைவுக்குப் பிறகு சகோதரிகளின் பிள்ளைகளை அம்மாவின் இடத்தில் இருந்து அரவணைத்தார்; அம்மா இல்லாத குறையை நீக்கியவர். மாலை வேளைகளில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுப்பது, கிரிக்கெட்-பம்பரம் விளையாடுவது, கதை சொல்லிச் சிரிக்கவைப்பது, விடுமுறைகளில் மொட்டைமாடி ஓடிப்பிடி வரை கூட்டமாய் மகிழ்வது—குழந்தைகளோடு குழந்தையாக விளையாடிய அந்தச் சிரிப்புகளும் “இப்படி ஒரு மாமா யாருக்கும் கிடைக்காது” என்ற அவர்கள் வார்த்தைகளும் என்றென்றும் நீங்காத நினைவுகள். சகோதரிகளுக்காக அவர் செய்யும் ஒவ்வொன்றையும் பார்த்து என் அப்பா பூரிப்பார்.
பொறியியல் படித்து வெளிநாட்டில் பணிபுரிந்தாலும், அவருள் இருக்கும் மிகச் சிறந்த ஓவியர் எங்கள் வீட்டின் அமைதியான பெருமை; சகோதரிகளுக்கு யாருக்கும் இல்லாத திறமை அது. அவரின் ஓவியங்களை கண்டு ரசிக்காதவர் இலர். திருமணத்துக்குப் பின்னும் விழாக்கள் வந்துவிட்டால் மனைவியோடும் குழந்தைகளோடும் சகோதரிகளின் விசேஷங்களில் முதல் ஆளாக நிற்பார்.
தாய்மாமன் என்ற பேரன்பையும், உடன்பிறந்த சகோதரன் என்ற உரிமையையும் விட்டுக்கொடுக்காமல், உற்றார் உறவினர் பேசும் வகையில் விழாவை நிறைவிப்பார். வீட்டுத் தொலைபேசியில் முதல் குரல் எப்போதும் அவருடையது—பண்டிகைத் திட்டமிடல், மருத்துவச் செலவுக்கு முன்கூட்டிய உதவி, “நான் இருக்கிறேன்” என்ற ஒரு வரியில் துணிவு தரும் பழக்கம். அதனால் ஒற்றுமை உயிர்ப்புடன் நிற்கிறது.
அவர் எங்களுடன் மகிழ்ச்சியாக இருந்த தருணங்களை நினைத்து மகிழ்கிறோம்; அவரை நினைக்காத நாளில்லை; நினைக்கும் நாளெல்லாம் எங்கள் வீடு திருநாளாம்.