விஜய் உடன் சேர்ந்தால் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வரலாம்...ஆரூடம் சொல்லும் எஸ்ஏசி
சென்னை : விஜய் கொடுக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் பவரில் இல்லாத காங்கிரஸ் மீண்டும் பவருக்கு வரும் என தவெக தலைவர் விஜய்யின் தந்தையும், சினிமா டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிக்கு ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என தவெக.,வின் முதல் மாநாடான விக்கிரவாண்டி மாநாட்டிலேயே அறிவித்தார் விஜய். அறிவிப்பு வெளியிட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. தமிழக சட்டசபை தேர்தல் வேறு நெருங்குகிறது. ஆனாலும் இதுவரை விஜய்யின் தலைமையை ஏற்று, தவெக கூட்டணியில் இணைய எந்த கட்சியும் முன் வரவில்லை. பல கட்சிகளும் தவெக.,வை தங்கள் கூட்டணிக்கு வரும் படி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தாலும், தாங்கள் தான் கூட்டணிக்கு தலைமை வசிப்போம் என்பதில் தவெக உறுதியாக உள்ளது.
இதற்கிடையில் திமுக., தலைமையுடன் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் இருந்ததால் காங்கிரஸ் கட்சி, தவெக பக்கம் செல்லும் என சொல்லப்பட்டது. தவெக பக்கம் செல்லலாம் என காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் கூறினாலும், திமுக கூட்டணியில் தான் தொடர வேண்டும் என சிலர் தொடர்ந்து போர்க்கொடி உயர்த்தி வருகிறார்கள். தளபதியின் பேச்சால் திமுக-காங்கிரஸ் மோதல் வெளிப்படையாக தெரிய துவங்கி உள்ள நிலையில், காங்கிரஸ் தங்களின் கூட்டணிக்கு எப்படியும் வந்து விடும் என்ற நம்பிக்கை தவெக.,வில் அதிகரிக்க துவங்கி உள்ளது.
இந்த சமயத்தில் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், ஒரு படத்தை வைத்து எல்லாம் விஜய்யை பிளாக்மெயில் செய்ய முடியாது. படத்திற்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. படத்தை பற்றி எல்லாம் விஜய் கவலைப்படவும் இல்லை. விஜய் தரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் பவரில் இல்லாத காங்கிரஸ் மீண்டும் பவருக்கு வர முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பேச்சு காங்கிரசிற்கு மறைமுகமாக கூட்டணி அழைப்பு விடுப்பதையே காட்டுகிறது. ஆனால் சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விஜய், மக்களுடன் தான் கூட்டணி. எந்த நட்பு சக்திகளின் துணையும் இல்லாமல் தங்களால் வெல்ல முடியும் என நம்பிக்கை உடன் கூறி இருந்தார். இதனால் தவெக., தனித்து போட்டியிட போவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது என நினைத்துக் கொண்டிருந்த வேளையில், எஸ்ஏசி.,யின் இந்த கருத்து தமிழக அரசியல் களத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதையே காட்டுகிறது.