சேலம் மயான கொள்ளை திருவிழா.. சேலத்தில் கோலாகலம்.. பக்தர்கள் பரவசம்!

Swarnalakshmi
Feb 17, 2026,04:37 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


ஒவ்வொரு வருடமும் மாசி மாத அமாவாசை அன்று ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் நடைபெறும் மிகவும் புகழ்பெற்ற ஆக்ரோஷமான விழா இந்த மயான கொள்ளை திருவிழா. சேலம் மாநகரில் உள்ள முக்கிய அங்காளம்மன் கோவில்களில் இந்த திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இன்று.


பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை இந்த நாளில் நிறைவேற்றினால் அம்மன் அருள் கட்டாயம் கிட்டும். தீய சக்திகள் அழியும் என்பது நம்பிக்கை.


சேலம் கடை வீதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் (பெரியாண்டிச்சி )கோவிலில் இன்று தங்கள் நேர்த்திக்கடன்களை தீர்க்க பக்தர்கள் அம்மன், காளி போன்ற வேடங்களை அணிந்து ஆக்ரோஷமாக ஆடிக்கொண்டு ஆடு கோழிகளை வாயில் கடித்து ருத்ரதாண்டவம் ஆடி  மயானத்திற்கு வருவர். 




மயானத்திற்கு செல்லும் வழியில் தரையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நீண்டுபடுத்து காளி வேடம் அணிந்து வந்தவர்களிடம் ஆசி பெற்றனர்.காளி வேடமிட்டு சாமி அருளில் வருபவர்கள் தரையில் படுத்து இருப்பவர்களை தாண்டி சென்றால் குழந்தை பாக்கியம் வேண்டி வழிபாடு செய்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றும், நோய்நொடிகள் தீரும், திருமணம் தள்ளிப் போகின்றவர்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும்  என்பது நம்பிக்கை.


பக்தர்களை தாண்டி சென்ற பின் அம்மன் வேடம் அணிந்தவர் பக்தர்கள் சுடுகாட்டில் சாம்பலை அள்ளிப் பூசிக்கொண்டு சூறை ஆடி விரதத்தை முடிவு செய்தனர். இந்த நிகழ்ச்சி சேலத்தைச் சுற்றியுள்ள சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மக்கள் திரண்டு வந்து பக்தி பரவசத்துடன் கண்டு களித்தனர்.இவ்விழா மிகவும் உற்சாகத்தோடு நடைபெற்றது.பக்தர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் அம்மனை வழிபட்டு மயான கொள்ளை திருவிழாவில் பங்கேற்றனர்.


சேலத்தில் மயான கொள்ளை நிகழ்வுக்காக 15 நாட்களுக்கு மேலாக விரதம் இருந்த பக்தர்கள் அங்காளமனாகவும், பெரியண்ணன் ஆகவும், முனியப்பன் யாகவும், கருப்பண்ணன் சாமி யாகவும் உள்ளிட்ட காவல் தெய்வங்களைப் போல வேடம் அணிந்து ஆக்ரோஷமான சாமி அருளுடன்,பம்பை மேளத்திற்கு ஏற்ப நடனம் ஆடியபடி ஊர்வலமாக செல்கின்றனர்.


அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் மயானத்திற்கு ஊர்வலமாக சென்று அங்குள்ள காவு சோறு படையல் இடுவர்.


மாசி மாத அமாவாசை தினமான இன்று சிவன் மற்றும் பார்வதியின் அருள் நிறைந்த தினமாக கருதப்படுகிறது.

 பக்தர்கள் காளி வேடமிட்டு குறக் கூடை  ஏந்தி மயானத்திற்கு சென்று அம்மனை வழிபடுவது வழக்கம். இந்த திருவிழா ஆக்ரோஷமான உருத்திர தாண்டவ ஆட்டம் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்துதலுடன் நடைபெறும் ஒரு முக்கிய பண்பாட்டு நிகழ்வாகும்.


சேலம் மாநகரில் நடைபெற்ற மயான கொள்ளை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தி பரவசம் அடைந்தனர்.


மேலும் இதுபோன்ற சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி  பாலசுப்ரமணி.