தந்தையின் தாகம்!
- கவிஞர் செ. சாந்தி சின்னத்தம்பி
அழகே! அரும்பே!
கதிர் நிலவே! குரும்பே!
மழைச்சாரலில் மணம் மகிழ
நடை போடும் மகிழம் பூவே!
அந்நிய தேசத்தில்
பிழைப்புக்கு ஓடியதால்
அருகிருந்து உனை வளர்க்க
இயலாமல் போனதடி!
நீ செய்கின்ற சேட்டையெல்லாம்
என்னிடத்தில்
குறுஞ்செய்தி வடிவினிலே
குவியலாய் இருக்குதடி!
நாவெடுத்து நீ அசைத்த
நன்மொழிகள் யாவையுமே
பாவி மகன் நெஞ்சினிலே
பசுமையாய்த் தவழுதடி!
இங்கு சுள் என்று சுடும்
கடும் வெயிலும்
சுருக்கெனக் குத்தும் உறை குளிரும்
தங்கமே! உன் முகம் பார்த்ததால்
தகர்ந்து தான் போகுமடி!
பண்டிகை நாளிலும்
பக்கமிருக்க முடியலையே!
சொந்த மண்ணில் சொர்க்கமே
உன்னோடிருக்க முடியலையே!
புன்னகைப் பூவே!
நீ பூமி பார்த்து நடந்தது போதும்...
நாலு பக்கம் பார்த்து நட!
வேலி ஒன்று போட்டு நட!
வஞ்சமதை நெஞ்சில் வைத்து
வாழுகின்ற கூட்டமுண்டு...
தஞ்சம் என்று நீ அடைந்தால்
சிதைத்து விடும் பேர்களுண்டு...
அஞ்சுகின்ற எண்ணமதை
அடியோடு அழித்துவிடு!
கெஞ்சுகின்ற நிலை தவிர்த்து
விஞ்சுகின்ற செயல் நடத்து!
வலி மிகுந்த வாழ்க்கையிலே
வல்லூராய் நிமிர்ந்து எழு!
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)