Santhi Sinnathambi Poem: விடுமுறைக்காகக் காத்திருந்தோம்.. காத்திருந்தோம்!
- மதுரை செ. சாந்தி சின்னத்தம்பி
விழுந்து விழுந்து படித்து
படித்ததை எழுத்தில் வடித்து
ஆண்டுத் தேர்வின் இறுதி நாளில்
விடுமுறைக்காகக் காத்திருந்தோம்! காத்திருந்தோம் !
வாசலில் காகம் கரைய
அத்தை மகனோ, சித்தி மகளோ
உறவு வரும் நேரம் என்று பார்த்திருந்தோம்!பார்த்திருந்தோம்!
விடிகாலை வேளையிலே வீட்டு மணி ஒலிக்கையிலே
வந்ததே உறவென்று வரவேற்றோம்!வரவேற்றோம்!
அம்மாவின் அன்பாலே உபசரிப்புப் பண்பாலே
அனைவருமே ஒன்றுகூடி
உண்டிருந்தோம்!உண்டிருந்தோம் !
ஓடையில நீராடி ஒத்தகல்லு மேடையிலே
ஊருகதை பேசித்தானே
சிரித்திருந்தோம்! சிரித்திருந்தோம் !
உறங்கா இரவுகளில்
பரமபதமோ தாயமோ,
பல்லாங்குழியோ அந்தாக்ஷரியோ
விழித்திருந்தோம்!விழித்திருந்தோம் !
தடுக்கி விடும் நேரத்தில் தாங்கிப் பிடிக்க உறவுகளும்
பரிதவிக்கும் போதினிலே பந்தங்களும் தேவையென
உணர்ந்திருந்தோம்! உணர்ந்திருந்தோம்!
ஓடி மறைந்தன நாட்கள்
வேகம் எடுத்துத் தாவிப் பறந்தன நாட்கள்
இனி அடுத்த கோடைவிடுமுறை
என்று வருமென
ஏங்கித் தவித்திருந்தோம்!தவித்திருந்தோம் !
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)