Santhi Sinnathambi Poem: விடுமுறைக்காகக் காத்திருந்தோம்.. காத்திருந்தோம்!

Su.tha Arivalagan
Aug 05, 2026,01:34 PM IST

- மதுரை செ. சாந்தி சின்னத்தம்பி


விழுந்து விழுந்து படித்து

படித்ததை எழுத்தில் வடித்து 


ஆண்டுத் தேர்வின் இறுதி நாளில் 

விடுமுறைக்காகக் காத்திருந்தோம்! காத்திருந்தோம் !


வாசலில் காகம் கரைய 

அத்தை மகனோ, சித்தி மகளோ 

உறவு வரும் நேரம் என்று பார்த்திருந்தோம்!பார்த்திருந்தோம்!


விடிகாலை வேளையிலே வீட்டு மணி ஒலிக்கையிலே

வந்ததே உறவென்று வரவேற்றோம்!வரவேற்றோம்!




அம்மாவின் அன்பாலே உபசரிப்புப் பண்பாலே 

அனைவருமே ஒன்றுகூடி

உண்டிருந்தோம்!உண்டிருந்தோம் !


ஓடையில நீராடி ஒத்தகல்லு மேடையிலே

ஊருகதை பேசித்தானே 

சிரித்திருந்தோம்! சிரித்திருந்தோம் !


உறங்கா இரவுகளில் 

பரமபதமோ தாயமோ,

பல்லாங்குழியோ அந்தாக்ஷரியோ 

விழித்திருந்தோம்!விழித்திருந்தோம் !


தடுக்கி விடும் நேரத்தில் தாங்கிப் பிடிக்க உறவுகளும் 

பரிதவிக்கும் போதினிலே பந்தங்களும் தேவையென 

உணர்ந்திருந்தோம்! உணர்ந்திருந்தோம்!


ஓடி மறைந்தன நாட்கள் 

வேகம் எடுத்துத் தாவிப் பறந்தன நாட்கள் 

இனி அடுத்த கோடைவிடுமுறை 

என்று வருமென 

ஏங்கித் தவித்திருந்தோம்!தவித்திருந்தோம் !


(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர் (ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4.  சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)