வாசமாய் வந்த சுவாசமே ! உயிர்மொழியே! வாழிய வாழியவே!
- கவிஞர் செ.சாந்தி சின்னத்தம்பி, மதுரை
முதன்மை மொழியாய் மூத்த மொழியாய்
மூவேந்தர் வளர்த்த மொழியாய்
முச்சங்கம் கண்ட மொழியாய்
மூவாயிரம் ஆண்டின் முன்னே
முகிழ்த்த மொழியே!
செப்புவதற்கு அரிய சிந்தைக்குள் நிறைந்த
பிறை நிலவென வளர்ந்து நிறைவளம் கண்ட
செம்மொழியே!
குறையிலா இலக்கியமும் கரையிலா நடையும் கொண்டு
வையமே போற்றுகின்ற வான்புகழ் கொண்ட
வண்தமிழே!
கன்னலென கவிச்சாறும்
மின்னலென கருத்துகளும்
பின்னலெனப் பிணைந்தே
பொலிவுறும் நீந்தமிழே!
காலத்தின் வேகத்திலும்
கன்னித் தமிழாய் நின்றவளே!
புதுமையின் பெட்டகமாய் கணினித் தமிழாய்
வென்றவளே !
பன்மொழியும் ஈன்றெடுத்துப்
பண்பாட்டுச் சிறந்தவளே!
பிறமொழிக் கலப்பின்றி உயர்ந்து தனித்துவமானவளே!
எண் திசையும் ஏத்துகின்ற சீர் பெற்ற எழிலானவளே!
உயிராய் உணர்வாய் உளமாய் உருக்கொண்ட
வாசமாய் வந்த சுவாசமே ! உயிர்மொழியே! வாழிய
வாழியவே!
(செ.சாந்தி சின்னத்தம்பி, அரசுப் பள்ளி தமிழாசிரியர்(ஓய்வு) மதுரை. சேலம் , பாரதியார் கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் பணிபுரிந்துள்ளேன். (2 ஆண்டுகள்) ஆர்வம்: கவிதை, இசை,பாடல், நாடகம் புனைதல். வெளியிட்ட கவிதை நூல்கள்: 2. 1. விழி மூடி யோசித்தால் 2. மௌனமும் பழகிடு. தொகுப்பு நூல்கள். 4. சென்னையில் நடந்த நேரடி கவிதை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்றது பெருமை)