கனவும் அலட்சியமும் – கல்வி வளாகத்தின் கதை!

Su.tha Arivalagan
Jan 22, 2026,01:25 PM IST

- வ. சரசுவதி 


காலை மணி ஒலிக்க,

வகுப்பறை கதவு திறக்கிறது—

ஒரு பக்கம் கனவுகள் சுமந்த ஆசிரியரின் கண்கள்,

மறுபக்கம் தூக்கமுடன் விளிக்கும் விழிகள்.


கரும்பலகையில் எழுத்துகள் மலர்கின்றன,

அறிவின் விதைகள் தூவப்படுகின்றன;


ஆனால் பின்னிருக்கும் இருக்கைகளில்

மொபைல் திரை ஒளி மட்டும் விழிக்கிறது.




“இது உங்களுடைய நாளை” என்று

ஆசிரியர் சொல்வார்,

நம்பிக்கையுடன்;


“இது இன்றைக்கு போதும்” என்று

மாணவர் சிந்திப்பான்,

அலட்சியத்துடன்.


புத்தகங்களில் உலகம் விரிகிறது,

வரலாறு, அறிவியல், கனவுகள்—


ஆனால் சிலருக்கோ

அது வெறும் தேர்வு நாளின் பயம் மட்டும்.


ஆசிரியரின் கனவு சிறியது அல்ல—

ஒரு மதிப்பெண் அல்ல,

ஒரு பதவி அல்ல,

ஒரு மனிதன் உருவாக வேண்டும் என்பதே.


“நாளை நீ நிற்பாய்”

என்று நினைப்பார் அவர்,

மேடையில் அல்ல—

சமூகத்தின் நடுவில், நேர்மையுடன்.


மாணவரோ சிரிப்பான்,

“இப்போ புரிய வேண்டாமே” என்று;

காலம் மட்டும் அமைதியாக

அவன் தோளில் கையை வைக்கும்.


தோல்வி வந்தால் ஆசிரியர் நினைவில் வருவார்,

“அவர் சொன்னது உண்மை” என்று;


அன்று புரியாத வார்த்தைகள்

இன்று வாழ்க்கை பாடமாய் மாறும்.


சிலர் விழிப்பார்கள் காலத்திலே,

கனவுகளுக்கு கை கொடுப்பார்கள்;

சிலர் தாமதிப்பார்கள்,

ஆனால் கனவு இன்னும் காத்திருக்கும்.


வகுப்பறைகள் மாறும்,

பெஞ்ச்கள் பழையதாகும்;

ஆனால் ஆசிரியரின் கனவு மட்டும்

தலைமுறைகள் கடந்து தொடரும்......


அலட்சியம் ஒரு மேகம் போல—

தற்காலிகம்;

ஆசிரியரின் கனவு சூரியன் போல—

என்றும் ஒளியூட்டும்.


அந்த ஒளி ஒருநாள்

மாணவன் மனதில் விழும்,

அப்போது புரியும்—

கல்வி பாடம் அல்ல,


மாணவனின் வாழ்க்கை பாதை!


(சரசுவதி சிவக்குமார், திருமங்கலம், மதுரை. செள. பொட்டிப்புரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடை நிலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பல்வேறு தளங்களில் கவிதை, கட்டுரைகள் படைத்து வருகிறார்)