நற்காலை பொழுது!
- சசிகலா விஸ்வநாதன்
புலர்ந்தும் புலராத
காலைப் பொழுது
விடிவெள்ளி மயங்கி
விரியும் சூரியன்
சற்றே தாமதமாக வரட்டுமே...
இன்று ஒரு நாள்!
அதிகாலை சாரலின் ஓசை;
சலங்கை ஒலி போல்
இளங்காற்றில் சாமரம் வீசும் தென்னை;
பவளமல்லியின் வாசம்;
படுக்கையின் கதகதப்பு;
போர்வையின் இருட்டிலும்;
தேன்சிட்டுக்குருவியின்
கொஞ்சும் கீச்சலின் இனிமை தடைபட்டது.
ஸ்டீஃபனின் சீட்டி ஒலியுடன்
செய்தி தாள் விழும் ஒலி;
தொடர்ந்து
பால் பாக்கெட் விழும் சப்தம்;
முன் வாயில் கேட்
'க்றீச்' ஒலி
கெங்கம்மாவின் வருகை.
"ஏங்க! " அவளின் குரல்;
காஃபி ரெடி
காலை புலர்ந்ததை அறிவித்ததாகி விட்டது.
அப்படியும்....
கண்மூடி படுத்திருந்தவன்
நெஞ்சின் மேல் இதமாக
பூனைக்குட்டி போல், விழுந்த மகள் கழுத்தைக் கட்டி;
கன்னத்தில் முத்தமிட;
நற்காலை பொழுது
நன்றே விடிந்தது!
(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில் இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்; வானமே எல்லை; கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)