ஒரு காலத்தில் இரத்த சிவப்பில்.. கைப்பை!

Su.tha Arivalagan
Jun 26, 2026,03:30 PM IST

- சசிகலா விஸ்வநாதன்


ஒரு காலத்தில் 

இரத்த சிவப்பில்

மின்னிய கைப்பை!


இன்று நைந்தும் பிய்ந்தும் 

நிறம் மாறி வெளிறி காண்கிறது;

எத்தனை தையல்கள்;

ஒக்கிடல்கள்!

 

அரசு வேலை கிட்டியதும்;

காலத்துக்கும் நின்று உழைக்கும்,என்று;

அப்பாவின் பரிசு!


கான்பூர்  லெதர் பை

உள் பையில் பத்து ரூபாயுடன்

மாதம் தவறாமல் மாற்றி வைப்பேன்; அதை!




அன்று, பணி நியமன ஆணையுடன்;

இன்று

பணி நிறைவு ஆணையுடன்.


காலத்துக்கும் உழைத்தது;

என் போலவே!


எத்தனை பேருந்து பயணம்.. அதனுடன்!

எத்தனை பணம்

அதனுள் வந்ததும் போனதும்!

எத்தனை நிநழ்வுகளும் நினைவுகளும்!

எத்தனை மகிழ்வுகளும்,

மலர்வுகளும்!

என் மடியிலும், தோளிலும் 

தோழியாய் என்னுடன். 


எனக்கு பணி நிறைவு போல்

என் கைப்பைக்கும் பணி நிறைவு!


தோளிலிருந்து இறங்கிய கைப்பையை

மனதிலிருந்து இறக்க மனமின்றி இறக்கி ; 


அப்பாவின் பழைய

மேல்துண்டில் சுற்றி

பட்டுப்புடவைகளின் அடியில் வைக்கிறேன்;

அப்பாவின் ஃபோட்டோவுடன்.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)