எங்கே சென்றீர்கள் அப்பா.. அப்பாவிற்கு ஓர் அன்பு மடல்!

Jun 26, 2026,03:13 PM IST

- உமாராணி சங்கரலிங்கம் 


என்னுடைய அப்பா P. ஸ்ரீநிவாசன்...               1


என்னுடைய முதல் hero என் அப்பா. நான்பிறந்த 20 நாட்களில் எனக்கு ஓர் அன்பு கடிதம் எழுதியவர் என் அப்பா.  அதை அடிக்கடி எனக்கு அம்மா வாசிக்க அந்த வயதிலேயே புரிந்த மாதிரி தலை ஆட்டி சிரிப்பேனாம். அம்மா கூறுவார்கள். 


நடக்க ஆரம்பித்த பருவத்தில்  சிவப்பு கலர் dress போட்டு என்னை வெளியே அழைத்துச் சென்று வேடிக்கை காட்டுவார்களாம் என் அப்பா. எனக்கு முதலில் பிறந்த அண்ணன் பிறந்து சில நாட்களிலே இறந்து விட்டதால் அடுத்து வந்த என்னிடம் அப்பாவிற்கு கொள்ளை அன்பு. எப்பொழுதும் அப்பாவுடன் தான் படுத்துக் கொள்வேனாம். 


பள்ளி செல்லும் காலங்களில் பள்ளி சென்று வந்த பின்பும், அப்பா அலுவலகம் சென்று எப்பொழுது வருவார்கள் என்று காத்திருப்பேன். அப்பா வந்தவுடன் அவர்கள் அணிந்திருந்த சட்டையை வாங்கி நான் போட்டுக் கொள்வேன். அதில் அப்பாவின் வாசம் இருக்கும். 




பள்ளி படிக்கும் காலங்களில் படிப்பு எவ்வளவு முக்கியம் என்று உணர்த்திய என் குரு என் அப்பாதான். படிப்பு மட்டுமல்ல ஒழுக்கமும் முக்கியம் என்று என் அம்மாவுடன் சேர்ந்து எனக்கு உணர்த்திய ஆசான். பள்ளியில் முதல் மாணவியாக வர எனக்கு நிறைய யோசனைகள் கூறிய குரு என் அப்பா. 


கல்லூரியில் சேர்ந்து விடுதியில் தங்கிப் படிக்க மிகவும் வருத்தமுற்ற காலங்களில் என்னால் முடியும்  என்று எனக்கே உணர்த்தியவர் என் அப்பா. பள்ளி,கல்லூரிக் காலங்களில் நடந்த எல்லாவற்றையும் என் அம்மாவை விட அப்பாவிடம் தான் பகிர்ந்து கொள்வேன். நான் சொல்வதை எல்லாம் பொறுமையுடன் கேட்பார்கள். அடிக்கடி நான் உபயோகிக்கும் வார்த்தை, அப்பா, அப்பா," இருங்க,"நான் ஒன்று சொல்லுகிறேன் கேளுங்கள் "என்று ஆயிரம் விஷயங்கள் பேசுவேன். " கையில் குமுதம் வைத்திருந்தால் அதைப் பறித்துக் கீழே  வைத்து விட்டு என்னைப் பாருங்கள் என்பேன்.". சிரித்துக் கொண்டேக் கேட்பீர்கள். இப்பொழுது  எங்கே சென்றீர்கள் அன்பு அப்பா?


(தொடரும்)


(உமாராணி சங்கரலிங்கம், யோகா முத்ரா பயிற்சியாளர், மன உளவியலாளர்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்