போதும்.. போதும்!

Su.tha Arivalagan
Jun 19, 2026,11:10 AM IST

- சசிகலா விஸ்வநாதன்


போதும் போதும்

என்னும் அளவில்,

உண்டு களித்தாயிற்று!

உடுத்தி அலுத்தாயிற்று!

ஊர் உலகம் 

பார்த்தாயிற்று!


கோவில் குளம்

சுற்றியாயிற்று!

வேணும் பணம் 

சேர்த்தாயிற்று!


தான  தருமம் 

உவந்தளித்தாயிற்று!

உறவினர், நண்பருக்கு

உதவிகள் பலவும்  செய்தாயிற்று.




தேவைகள் குறைந்தாயிற்று.

ஆசைகளும் அறுந்தாயிற்று.

ஆணவம் மண்ணில்

புதைந்தாயிற்று

இன்பமாய், இன்று 

இன்னுயிரைவிட, சித்தமாயிற்று!


உயிரும் என்னை விட தயாராய்;

இருப்பதை நானும் உணர்ந்தாயிற்று

உயிர் அந்தகன் வரவு நோக்க;

அவனோ; அளவிலியின்

ஆணை எதிர் நோக்க....

முதுமை காத்திருக்கிறது

எதிர்பார்ப்பின் அயர்வில்!


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)