விஜய்க்கு துணை முதல்வர் பதவியா? செங்கோட்டையன் சொன்ன காட்டமான பதில்

Su.tha Arivalagan
Mar 16, 2026,06:07 PM IST

ஈரோடு: தவெக தலைவர் விஜய் தமிழக சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிட போகிறாரா? அல்லது கூட்டணி வைக்க போகிறாரா? ஒருவேளை கூட்டணி என்றால் யாருடன்? என்டிஏ கூட்டணியில் விஜய் சேர உள்ளதாக சொல்லப்படுவது உண்மை? இது தான் கடந்த சில நாட்களாக தமிழக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தவெக.,வின் மூத்த நிர்வாகியான கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.


துணை முதலமைச்சர் பதவிக்கு வாய்ப்பில்லை :


அதிமுகவில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தவெக-வில் இணைந்த மூத்த அரசியல் தலைவர் செங்கோட்டையன், ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது விஜய்யின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசினார். அப்போது, "விஜய் அவர்கள் துணை முதலமைச்சர் போன்ற பதவிகளை ஏற்றுக்கொண்டு சமரசம் (Settle) செய்துகொள்ளும் எண்ணத்தில் கட்சி தொடங்கவில்லை. தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவும், ஊழலற்ற ஆட்சியை வழங்கவுமே அவர் அரசியலுக்கு வந்துள்ளார். எனவே, அவர் துணை முதலமைச்சர் பதவிக்கு உடன்படுவார் என்பதில் எள்ளளவும் உண்மையில்லை. 2026 தேர்தலில் மக்கள் ஆதரவோடு விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறுவது உறுதி" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.


தனித்துப் போட்டியா? கூட்டணிக் கணக்குகள் :




கூட்டணி குறித்த யூகங்களுக்குப் பதிலளித்த செங்கோட்டையன், தவெகவின் பலம் விவரித்தார். அவர் கூறுகையில், தமிழகத்திலுள்ள அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை கட்சித் தலைவர் விஜய் ஏற்கனவே தொடங்கிவிட்டார். வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல்கள் மற்றும் கள ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாஜக அல்லது மற்ற கட்சிகளுடன் கூட்டணி என வெளியாகும் தகவல்கள் திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்திகள் என்று அவர் மறுத்தார்.


"எம்.ஜி.ஆர் வழியில் விஜய்" :


செங்கோட்டையன் தனது உரையில், விஜய்யின் அரசியல் பயணம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் பாதையைப் போலவே இருப்பதாகக் குறிப்பிட்டார். "மக்கள் செல்வாக்கு மற்றும் ஏழை எளியோருக்கான நலத்திட்டங்கள் மூலம் எம்.ஜி.ஆர் எப்படி மக்களின் இதயங்களை வென்றாரோ, அதேபோல் விஜய்யும் மக்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ளார். 2026-ல் தவெக மிகப்பெரிய வரலாற்று வெற்றியைப் பதிவு செய்யும்" என்றார். தேர்தல் நெருங்கும் வேளையில், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பொதுமக்கள் முகம் சுளிக்காத வகையில் செயல்பட வேண்டும் என்றும், கட்சியின் 10 முக்கிய கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.