Short Story: கண்ணாளனே

Su.tha Arivalagan
Jul 02, 2026,11:36 AM IST

- சசிகலா விஸ்வநாதன்


"ராதிகாவை அழைத்து வாங்க, அக்கா" என்று மாமா சொல்ல ,மென்னகையுடன், ராதிகா வந்தாள். அழகி என்று சொல்ல முடியாது, எனினும், ஏதோ ஒரு கவர்ச்சி;அதிகனை ஈர்த்தது.கனரா வங்கியில் வேலை செய்கிறாள். 


இனிமையாகவும், தன்னம்பிக்கையுடனும்,பேசிக் கொண்டு இருந்தாள். அதிகனின் தாயாரிடமும், தங்கையுடனும், சரளமாகப் பேசினாலும், அவர்கள் தமிழில் கேட்ட கேள்விகளுக்கெல்லாம், ராதிகா ஆங்கிலத்தில் பதில் சொன்னது அதிகன் வீட்டாருக்கு உறுத்தலாய் இருந்தது. 


அதிகனின் தாயார் அரசு பணியாளர். தங்கையும் கல்லூரியில் படிப்பதால் ஆங்கிலத்தில் இயல்பாக உரையாடினார்கள். ஆயினும் அதிகனின் அத்தை "சடார்" என்று ராதிகாவிடம்,"ஏனம்மா, ராதிகா! வீட்டில் எப்போதும் இங்லீஷில்தான் பேசுவீர்களா? அதிகன் அம்மாவிடம் இங்லிஷிலேயே பேசுகிறாய். அவள் தமிழில் கேட்ட கேள்விகளுக்கு நீ இங்லீஷிலேயே பதில் சொல்கிறாயே,"என்று கேட்க; ஓரிரு நிமிடங்கள் சங்கடமான அமைதி நிலவியது.


ராதிகாவின் தாயார் ஏதோ சொல்ல வாயெடுக்க; ராதிகாவே," அத்தை! மன்னித்துக் கொள்ளுங்கள். எனக்கு முன்பின் பழக்கமாகாதவருடன் தமிழில் பேசினால் சொற்கள் திக்கும். நா புரண்டு கொடுக்காது. பயத்தினால் அல்ல; தயக்கத்தினால். நீங்கள் கேட்ட கேள்வி சரிதான். எனது நிலை, உங்களுக்கு இப்போதே தெரிய வந்ததும், நன்மைக்காகவே; என்று தோன்றுகிறது. 




என் வீட்டாருடன் நான் தமிழில் திக்காமல் பேசுவேன். சரிதானே, மாமா,"என்று எளிதான ஆங்கிலத்திலேயே சொல்லவும். அதிகனின் அத்தை, என்ன மறுமொழி கொடுப்பது என்ற யோசனையில் தாமதித்தாள். அந்த இடைவெளி நேரத்தை பயன்படுத்தி இடைமறித்த அதிகன் ," திருமணத்திற்குப் பின்பு நாம் "ராதிகாவின் வீட்டார்" என்று ஆகி விடுவோம். அப்போது அவள் தமிழிலேயே தயக்கமின்றி பேசுவாள்; இல்லையா," என்று திருமணத்திற்கு தனது சம்மதத்தை கிட்டத்தட்ட நேரிடையாக சொன்னார்.


அதைக் கேட்ட ராதிகா, புன்சிரிப்புடன் தன் அலைபேசியில், "கண்ணாளா! நன்றி" என்று அழகு தமிழில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்ப; அதைப் பார்த்த அதிகன்," உயர்த்தின கட்டைவிரல்" குறியீட்டை பதிலாக அனுப்ப, அந்தக் கணத்தில் ஒரு மென்மையான காதல், மந்தணமாய் மலர்ந்து மணம் வீசத் தொடங்கியது.


(சசிகலா விஸ்வநாதன் - தடய அறிவியல் துறையில் உதவி இயக்குநராக பணி நிறைவில்  இருக்கும் முதியவள். அதிகம் அறியப்படாத நான்; இரண்டு வருடங்களாக ஓய்வு நேரத்தில் கவிதைகளும் சிறுகதைகளும் எழுதிக்கொண்டு இருக்கிறேன் . எனது கதைகளும், கவிதைகளும் ,தமிழ் நெஞ்சம்;  வானமே எல்லை;  கொலுசு;மலர் வனம்; சக்தி பெண்ணிதழ்; ஆகியவற்றில் வெளியாகின்றன. புஸ்தகா நிறுவனம் மூலம் இது வரை நான்கு  கதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன்)